Saturday, September 24, 2011

"வடசொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 5


இந்தப் பதிவில் "வடசொல்" என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


ஏன் என்றால் ... "வடசொல்" என்பதும் தமிழ்ச் செய்யுள் செய்யப் பயன்படும் ஒரு வகைச் சொல்.

நினைவில் வைக்கவேண்டுவது, தொல்காப்பியர் சொன்னது:

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

அதாவது ... "இயற்சொல்" "திரிசொல்" "திசைச்சொல்" "வடசொல்" என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே ... தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் சொற்கள்.

****************************************
வடசொல்
---------------

தொல்காப்பியர் சொல்வது:

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே

இளம்பூரணர் சொல்கிறார்:
"வடசொல் கிளவி என்று சொல்லப்படுவது ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடைய ஆகும் சொல்."

அதாவது: 
"வடசொல்"-னா ... (தமிழ்-லெ இல்லாம) ஆரியத்துக்கு-னு தனியா இருக்ற எழுத்தை எடுத்துத் தள்ளி வச்சுட்டு, ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் ஒரு சொல்.

வெளங்கலெயே? 

சரி. வெளக்கப் பாக்றேன். 

இப்ப ஒரு பேச்சு / சொல் ஒண்ணு இருக்கு-னு எடுத்துக்குவோம். அதெப் புழங்கும்போது ... அதுக்கு-னு இருக்ற ஆரிய எழுத்தெ ஒதுக்கிட்டு, ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவா இருக்ற எழுத்துலெ புழங்கினா ... அதுக்குப் பெயர்தான் "வடசொல்."

ஆங்???

இளம்பூரணர் கொடுக்கும் எடுத்துக்காட்டும் விளக்கமும்: 
"அவை, 'உலகம், குங்குமம், நற்குணம்' என்னும் தொடக்கத்தன. குங்குமம் என்ற இடத்து இருசார்க்கும் பொது எழுத்தினான் வருதலுடைமையும், ஆரியத்தானும் தமிழானும் ஒருபொருட்கே உரியவாகி வழங்கி வருதல் உடைமையும் அறிக." 

இப்ப பாருங்க.

இளம்பூரணர் கொடுத்திருக்கிற பட்டியல்: உலகம், குங்குமம், நற்குணம் 

இப்படிப்பட்ட ஒரு சொல்லில் பல ஒலிகள் வரும். ஆனால் ... தமிழில் அந்த ஒவ்வோர் ஒலியையும் தனித் தனி எழுத்தில் குறிப்பதில்லை; ஆரியத்தில் குறிப்பது உண்டு. 

புரியவில்லையே?

சரி.

இந்த ... "குங்குமம்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை வாய்விட்டுத் தமிழில் சொல்லிப்பாருங்கள். முதலில் இருக்கும் "கு"-வுக்கும் இரண்டாவதாக இருக்கும் "கு"வுக்கும் இடையே வேறுபாடு இருப்பதை உணருவீர்கள். இன்னும் குறிப்பாகச் சொன்னால், முதலில் வெளிப்படும் "ககர" ஒலிக்கும் "ங்" என்பதை அடுத்து வரும் "ககர" ஒலிக்கும் இடையே வேறுபாடு இருப்பதை உணருவீர்கள்.

தமிழில் இந்த இரண்டு வகைக் ககர ஒலிகளைக் குறிக்கத் தனித் தனி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லை; ஒரே "க"தான். ஆனால், ஆரியத்தில் இந்த இரண்டு வகைப்பட்ட "ககர" ஒலிகளைக் குறிக்க இரண்டு வேறு எழுத்துக்கள் உண்டு.

ஆக, "குங்குமம்" என்ற சொல் ஆரியத்திலும் தமிழிலும் ஒரே பொருளைச் சுட்டுகிறது; ஆனால் ஆரியத்தில் இந்தச் சொல்லில் உள்ள "ககர"த்தின் ஒலிகள் வேறு வேறு வகையில் எழுதப்படும். அப்படி எழுதப்பட்டாலும் இரண்டு மொழியிலும் "குங்குமம்" என்ற சொல் ஒலிக்கும் முறையில் வேறுபாடு இல்லை. இந்த மாதிரிப் புழங்குவது "வடசொல்."

சரி, அப்ப, "குங்குமம்" என்ற ஒரு சொல்லெ எடுத்துக்காட்டி, ரெண்டு வித "க" ஒலிகளை ஒரே தமிழ் எழுத்து "க" குறிச்சிட முடியும்-னு சொல்றீங்க. ஆனா, ஆரியத்துலெ "ககர"த்துக்கு ரெண்டுக்கு மேற்பட்ட ஒலிகள் இருக்ற மாதிரித் தோணுதே. அந்த ஒலிகளெ வச்சு ஒரு சொல் இருந்தா ... தமிழிலே என்ன செய்வீங்க?

ஆ? அதுக்குத்தான் தொல்காப்பியர் இன்னொரு நூற்பாவும் செய்திருக்கிறார்: 

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

இளம்பூரணர் உரை தருகிறார்: 
"இருசார் வழக்கிற்கும் ஒத்த வழக்கினான் வாராது சிதைந்து வந்தனவாயினும் பொருந்தி வந்தன வரையப்படா, வடசொல்லாதற்கு என்பது."

இளம்பூரணர் உரை:
"அவை, 'நிதியந் துஞ்சும்' எனவும் 'தசநான்கெய்திய பணைமருள் நோன்றாள்' எனவும் வரும்."

இது என்ன புதுச் செய்தி?

அதாவது:
"ஒரு சொல், ஆரியம் தமிழ் ரெண்டு மொழியிலெயும் ஒரே பொருளைச் சுட்டுது-னு வச்சுக்குவோம். ஆனா அதைத் தமிழிலெ எழுதும்போது ஏதோ ஒரு சிதைவு உண்டாகிறதுபோல இருந்தாலும், போகட்டும். பொருத்தமாக வந்தால் அதைத் தள்ள வேண்டாம். அதுவும் வடசொல்தான்."

இன்னும் புரியலெயே.

சரி.

இப்பொ, "நிதி"-னு ஒரு சொல் இருக்கு. அந்தச் சொல் ஆரியத்திலும் தமிழிலும் ஒரே பொருளைக் (meaning) குறிக்கும் -- "அரிய பொருள்" ("treasure") என்று. 

ஆனால், தமிழில் எழுதிய "நிதி" என்ற சொல்லை வாய்விட்டுச் சொல்லும்போது -- ஒலிக்கும்போது, உச்சரிக்கும்போது, பலுக்கும்போது -- அந்த ... "த" ஒலிப்பில் ஏதோ குறைபாடு இருக்கிறதே. 

அதேபோல ... "தச" என்ற சொல்லும் "பத்து" ("ten") என்ற பொருளை இரண்டு மொழியிலும் குறிக்கும்.

ஆனால், தமிழில் எழுதிய "தச" என்ற சொல்லை வாய்விட்டுச் சொல்லும்போது ... அந்த ... "ச" ஒலிப்பில் ஏதோ குறைபாடு இருப்பதாகத் தெரிகிறதே.

இப்படி யாராவது புலம்பினாலும் ... அந்தச் சொற்களை வரிந்து/வரைந்து கட்டித் தள்ளிவிடவேண்டாம். ஏனென்றால் அவை ஆரியத்தும் தமிழுக்கும் ஒத்த எழுத்து வழக்கில் புழங்குவதால். அவையும் "வடசொல்"லே. அவையும் தமிழ்ச்செய்யுள் செய்வதற்கு ஏற்ற சொற்களே.

["த" என்பது ஒலியில் சிதைவுபட்டால் குற்றம் இல்லை, அது "க" போலவோ "ப" போலவோ எழுதப்படாதவரைக்கும்!]

புரிகிறதா?

****************************************

என் தனிப்பட்ட கருத்தும் முடிவுரையும் இனி வரும் ... எழுத இயன்றபோது! :-)












4 comments:

  1. தொல்காப்பியர் அடிச்சுவட்டில் உங்கள் துணையோடு கவனமாக நடக்க முடிகிறது.

    மிக்க நன்றி



    தேவ்

    ReplyDelete
  2. Hi Professor Rajam - delighted to find your blog. Both Karpgam and I would like to get back in touch. Regards, Raj Mutharasan

    ReplyDelete
  3. மன்னிக்கவும்,
    இது புரியவில்லை. இன்னும் சற்று எளிதாக விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

    வடசொல் என்பது கிரந்த எழுத்துக்களா
    அல்லது
    இரண்டு மொழியிக்கும் பொதுவான ஒரே சொற்களா?

    ReplyDelete
  4. ”அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை,
    வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
    விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழி தொகுத்தலும்,
    நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழி குறுக்கலும்,
    நாட்டல் வழி’ என்மனார் புலவர்.” (சொல்: 9 :7)

    வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ,
    எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
    சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்” (சொல்: 5 :6)

    அம்மா,
    மேலேயுள்ள இரண்டு தொல்காப்பிய செய்யுளுக்கும் உங்கள் பாணியில் எளிய விளக்கங்கள் தேவை.

    ReplyDelete