Friday, February 15, 2013

வேர்ச்சொல் ஆய்வு ...

  
  
முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன் ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் அவ்வளவாகப் பிடிப்பில்லை, திறமையும் இல்லை. ஏன் என்றால் ... அந்த வகை ஆய்வுக்குத் தேவையான பலமொழிப் புலமை இல்லை. என் தமிழை மட்டுமே முழுதுமாக அறிந்தேனா என்பதுவும் ஐயமே!



இக்கால வேர்ச்சொல் ஆய்வின் நடைமுறை எனக்கு ஒத்துவரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல இருக்கிறது. சரியான சான்றுகள் இல்லாமல் ... இங்கேயிருந்து இது அங்கே போச்சு என்ற கூற்றும், இந்த ஒலி இப்படித் திரியும் என்ற கூற்றும் என்னை இந்தவகை ஆய்விலிருந்து அப்புறப்படுத்துகின்றன. 


என் முறைப்படி, ஒரு தமிழ்ச் சொல்லுக்கு வேர்ச்சொல் காணவேண்டுமென்றால் ... 
  

1. ஒலி ஒப்புமை மட்டும் நோக்கி உடனே பிற மொழிக்குத் தாவக்கூடாது. 


2. அந்தச் சொல் தமிழிலேயே காலந்தோறும் எப்படிப் புழங்கிவந்திருக்கிறது என்பதைத் திட்டமாக அறியவேண்டும் (இலக்கியம், இலக்கணம், உரைகள், எழுத்து, பேச்சு, கல்வெட்டு, இன்ன பிற அகப்படும் சான்றுகள் மூலம்).  


3. காலத்தையும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். வெறுமனே ... ஈன் என்ற மிகப் பழைய தமிழ்ச்சொல்லில் இருந்துதான் yean என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது என்றும், நெருடு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்துதான்  nerd என்ற ஆங்கிலச் சொல் உருவானது என்றும் சொல்லுவதில் பயனும் இல்லை, பிறருடைய கிண்டலுக்கும் ஆளாவோம். 


4. தமிழுக்குள்ளேயே கிடைக்கும் சான்றுகளுக்கு இடையே காணப்படும் ஒலி மாற்றங்களுக்கும் பொருள் மாற்றங்களுக்கும் நேரிய முறையில் விளக்கம் கொடுக்கவேண்டும். அதாவது, இன்ன ஒலி/பொருள், இந்தச் சொற்சூழலில், இந்தச் சமூகச் சூழலில், இந்தக் காலத்தில் ... இப்படி மாறியிருக்கிறது என்று சான்று காட்டவேண்டும். 


5. எல்லாவற்றுக்கும் மேலாக ...  தமிழைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் பிறமொழிச் சொற்களைக் களையவேண்டி வேர்ச்சொல் ஆய்வில் இறங்குவது நேரியதில்லை. ஜன்னல் என்ற சொல்லில் உள்ள கிரந்த ஒலியை/எழுத்தைக் களையவேண்டிச் சன்னல் என்று சொன்னாலும் எழுதினாலும் அது பிறமொழிச் சொல்லே! போர்த்துக்கீசியம். தமிழில் இருக்கு ஓர் அழகான சொல்: காலதர் (== 'காற்று வழி'). அதைத் தவறாக நம் இளைய தலைமுறை 'காதலர்' என்று எழுதிவிடும். அதுக்கு ஜன்னலே பரவாயில்லை! ;-) அலமாரியை என்ன செய்வீர்கள்? கிராம்பு என்பதை இலவங்கம் என்று சொல்லலாம், ஆனால் அது எங்கேயிருந்து வந்தது?


அடுத்து, சில சொற்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். ஓர் இடத்தில் நிகழும் ஒலி மாற்றத்தைப் பொத்தாம் பொதுவாக எல்லா இடத்துக்கும் பொருத்த முடியுமா என்று பாருங்கள். 

++++++++++++++++++++++++++++++++++++

சில எடுத்துக்காட்டு
------------------------ 

எழுத்தில் பேச்சில் மாற்றம் வேர்?
---------------------------------------------------------------------------

அகம் ஆம் க > 0  ?
இலை எல இ > எ ?
இழப்பு, இழவு எழப்பு, எழவு     இ > எ   ?
உலக்கை ஒலக்கை உ > ஒ ?
உவகை ஓகை உ > ஓ       ?
ஒப்பிலி உப்பிலி ஒ > உ       ?


குடை கொடெ உ > ஒ       ?
கொடை கொடை
குயவன் கொயவன்
குலை (bunch) கொல  
பருமன் பெருமன் அ > எ      ?
பிறகு பொறவு இ > ஒ; க் > வ்    ?
புறா, புறவு பொறா உ > ஒ           ?

விரல் வெரல் இ > எ                ?


++++++++++++++++++++++++++++
கன்று கண்டு ன்ற் > ண்ட் 
கன்று கன்னு ன்ற் > ன்ன் 
மூன்று மூணு ன்ற் > ண்

++++++++++++++++++++++++++++
பூண்டு பூடு ண் > 0
    
தாண்டு ?          
++++++++++++++++++++++++++++ 
ஓத்து (வேதம், நூற்பா) < ஓது 
ஓத்து (இன்று கொச்சை மொழி)      <      உவ
கொல < கொல் (kill)? குலை (bunch)? 

++++++++++++++++++++++++++++++++

மரம் ~ மரன்
குணம் ~ குணன் 

அப்போ ... அவன் என்பதை அவம் என்றும் சொல்லலாமோ?! 



பந்தர் ~ பந்தல் 

அப்போ ... இவர் என்பது இவல் என்றும் புழங்கப் படலாமே?!

+++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்கிறாள் சொல்றா, சொல்லுதா

இதைப் பற்றி என்ன சொல்லலாம்? 


வால், வாலம் ('tail'; சங்க இலக்கியச் சான்று). 

அப்போ, கால் ('leg') என்பது காலம் என்றும் சொல்லப்படுமோ?

++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆல் < யால் < சால் 
ஆனை < யானை < சானை?
ஆத்தா < யாத்தா? < சாத்தா?

++++++++++++++++++++++++++++++++++++++++++ 

இங்கேயும் பார்க்கவும்: 
http://viruntu.blogspot.com/2010/10/roots-and-stems.html 


++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு வினாடி வினா: "சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன? 








Sunday, February 3, 2013

வாய்பாடு, வாய்ப்பாடு, வாய்ப்பாட்டு, மனப்பாடம் ...

  
அண்மையில் தமிழ்மன்றம் (tamilmanram@googlegroups.com) குழுமத்தில் வாய்பாடு, வாய்ப்பாடு என்ற சொற்களைப் பற்றி உரையாடல் நடந்தது.
  
சரியான பயன்பாடு எது -- வாய்பாடு என்பதா? வாய்ப்பாடு என்பதா?
  
அதைத் தொடர்ந்து இங்கே இந்த இடுகையில் என் கருத்தைத் தெரிவிக்கிறேன். இந்த என் பதிவின் கருத்துகளை வேறு எங்கும் எடுத்துச் சொல்ல வேண்டுவோர் அன்புகூர்ந்து இந்த வலைத்தளத்திலிருந்து (http://mytamil-rasikai.blogspot.com/) எடுத்த கருத்து என்று தெரிவிப்பது நயநாகரிகம். நன்றி! 

**************************

எனக்குத் தெரிந்த விளக்கம்.

பள்ளிப் பருவத்தில் நான் தெரிந்துகொண்டது: வாய்பாடு, வாய்ப்பாடு, வாய்ப்பாட்டு, மனப்பாடம் என்று  பல சொற்கள் உண்டு; ஒவ்வொன்றும் தனித்தனிப் பொருள் கொண்டது. 


வாய்பாடு
---------------  
இது தமிழ் யாப்பிலக்கணத்தில் மட்டுமே பயன்படுவது. தமிழ் யாப்பில் 'அசை'களின் அமைப்பை விளக்கத் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற சொற்கள் பயன்படுகின்றன.

இந்தச் சொற்கள் ஒருவகைக் குறியீட்டுச் சொற்கள். ஆங்கிலத்தில் mnemonic  device அல்லது code அல்லது formula என்று சொல்லலாம். இதுவே வாய்பாடு. 
 

இந்தச் சொற்களின் தனிப்பொருள், அதாவது 'தேமா' என்றால் இனிய சுவை தரும் மாமரம்/மாம்பழம், 'கருவிள' என்றால் கருமையான ஒரு மரம், ... என்பதுபோல. இந்தப் பொருள் எல்லாம் இங்கே நமக்குப் பயன்படாது. இந்தச் சொற்களின் அசை அமைப்பே தமிழ்ச் செய்யுளில் புழங்கும் சொற்கட்டு அமைப்பை அறிந்துகொள்ள உதவும்.

காட்டாக, தேமா என்பது ... இரண்டு நெடில் அல்லது குறில் அசைகள் அமைந்த ஒரு சொல்லுக்குக் குறியீடு/வாய்பாடு. ஒவ்வோர் அசைக்கும் தொடக்கத்திலும் இடையிலும் கடைசியிலும் மெய்யொலி வரலாம். 


அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தாத்தா, பாட்டி,  பூக்கள், நண்பன் ... என்ற சொற்களின் அமைப்பைப் பாருங்கள்.


அம்மா, அப்பா, அக்கா ஆகிய சொற்களின் அசை அமைப்பு: குறில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + நெடில் உயிரொலி


அண்ணன் என்ற சொல்லின் அசை அமைப்பு: குறில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி


தாத்தா என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + நெடில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + நெடில் உயிரொலி


பாட்டி என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + நெடில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + குறில் உயிரொலி 

  
 
பூக்கள் என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + நெடில் உயிரொலி + மெய்யொலி + மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி 


நண்பன் என்ற சொல்லின் அசை அமைப்பு: மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி + குறில் உயிரொலி + மெய்யொலி 



பாருங்கள், இத்தனை வகைப்பட்ட சொற்களுக்கு ஒரே கட்டமைப்பைத் தருகிறது தேமா என்ற சொல்; இதுவே தேமா வாய்பாடு.

ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ... one form provides the base for generating many words of the same format. 


வாய்ப்பாடு
---------------- 
என் பள்ளிப் பருவத்தில், காலையில் முதல் வகுப்பு கணக்குப் பாடமாகத்தான் இருந்தது. தூக்கக் கலக்கம் நீங்காத நிலையில் "ஓரோண் ஒண்ணு; ஈரோண் ரெண்டு" ... என்று தொடங்கிப் "பதினாஆஆறு பதினாஆறு எரநூத்தி அம்பத்தாஆறு" என்று கூட்டமாகப் பாடி முடிப்பது வழக்கம். இது முழு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாடு. இதற்கு அடுத்து, பின்ன (fraction) வாய்ப்பாடு உண்டு.  மிகவும் கடுமையான பயிற்சியாக இருக்கும்!

அந்த வகைச் சொற்புழக்கமே வாய்ப்பாடு. ஆங்கிலத்தில் multiplication table என்று சொல்வார்கள். 

இங்கே பாருங்கள். இரண்டு எண்கள் (A, B என) எடுத்துக்கொள்ளப்படும். முதலில் சொல்லப்படும் எண் (A என்பது) மாறிக்கொண்டேயிருக்கும். அதை அடுத்துச் சொல்லப்படும் எண் (B என்பது) அதைப் (A-ஐப்) பெருக்க எடுத்துக்கொள்ளப்படும்; அந்த எண் (B என்பது) மாறாமல் நிலைப்பட்டதாக இருக்கும்.
  
  
கட்டாக, 5-ஆம் வாய்ப்பாடு இப்படிப் போகும்:
  
"ஓரஞ்சு அஞ்சு (1 x 5 = 5)
ஈரஞ்சு பத்து (2 x 5 = 10)
மூவஞ்சு பதினஞ்சு (3x 5 = 15)
... ... ... "  

இங்கே 5 என்ற எண் மாறாதது (constant). அதனால் பெருக்கப்படும் எண் மாறும் (variable). ஆனால் ஒரு குறிப்பிட்ட பெருக்கும் எண்ணும் பெருக்கப்பட்ட எண்ணும் தரும் தொகை மாறாதது. 2 x 5 = 10 என்றால் அந்தத் தொகை மாறாதது.

இப்படிப் புழங்குவதுதான் வாய்ப்பாடு.



வாய்ப்பாட்டு
-------------------- 
வாய்ப்பாட்டு என்பது இசை தொடர்பானது. ஒரு செய்யுளோ, பாட்டோ இசைப்படுத்தப்பட்டுக் குரலால் பாடப்படுவது வாய்ப்பாட்டு.

அட, அப்பிடீன்னா வேற என்ன பாட்டு இருக்கு-னு கேக்கலாம். சரியே.

ஒரு பாட்டை (ஆங்கிலத்தில் lyric என்று சொல்கிறார்களே அதை) வீணை, வயலின், குழல் போன்ற இசைக்கருவிகள் மூலமும் இசைக்கலாம், இல்லையா? இப்படி இசைக்கருவிகளின்வழி ஒரு பாடலை இசைப்பது "வாசித்தல்" எனக் குறிக்கப்படும். ஆனால், குரல்வளையைப் பயன்படுத்திக் கண்டத்தால் பாடுவது என்பது மாதவி பாடியதுபோலப் பாடுவது. அதுவே வாய்ப்பாட்டு. அந்தப் பாட்டை யாழிசையோடு சேர்த்துப் பாடுகிறாள் மாதவி. இந்தக் குறிப்புகளைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.


வாய்பாட்டிலும், வாய்ப்பாடு என்பதிலும் உள்ள மாற்றங்களுக்கு இங்கே இடமில்லை. அதாவது பாடலின் சொற்கட்டு மாறாது. யார் பாடினாலும் பாடலின் சொல் மாறாமல் அமையவேண்டும்.

இதுவே வாய்ப்பாட்டு.

நிற்க.

வாய்ப்பாட்டு போல வேறு ஏதாவது இருக்கா? ஆமாம், மனப்பாடம் என்று சொல்கிறோமே அது இருக்கு.



மனப்பாடம்
----------------
இது என்ன என்றால் ... இது வாய்பாடு, வாய்ப்பாடு போன்ற உத்திகளை வாயே திறக்காமல் மனதிலேயே சொல்லிச் சொல்லி, தேவையான நேரத்தில் நினைவுக்கு வரச் செய்வது. இதை மனனம் செய்வது அல்லது உருப்போடுவது, நெட்டுருப் போடுவது என்று சொல்வார்கள், இல்லையா? 


இதை ஒருவகை "வேண்டுதல்" என்றும் சொல்லலாம். ஐங்குறுநூற்றில் ஒரு தாய் வேண்டுகிறாளே ... "வாழி ஆதன்! வாழி அவினி! நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க! ... " இப்படி உலகளாவிய நல்ல நிலைக்காக ... அதுபோல. 


ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளாமலேயே மனப்பாடம் செய்யலாம்! புரிந்து செய்வது வாழ்நாள் முழுவதும் உதவும்.


சமயக்கோட்பாடு தொடர்பான பல கருத்துகளைப் புரிந்துகொள்ளாமலே சிலர் மனப்பாடம் செய்வது உண்டு. ஆனாலும் அந்த முயற்சி பிற்காலத்தில் வீண்போகாது. மெல்ல மெல்ல அந்தக் கருத்துகள் புரியத்தொடங்கும்.


மணிமேகலை இப்படித்தான் பவுத்த சமயக்கோட்பாடுகளை மனப்பாடம் செய்திருக்க வேண்டும். காப்பியத்தின் இறுதியில், "மனப்பாட்டு அறம் வாய்வதாக" என்று அறவண அடிகளிடம் வேண்டுகிறாள். அதாவது, அதுவரை அவள் அல்லும் பகலும் நினைத்தும் வேண்டியும் வந்த அறக்கோட்பாடுகள் உண்மையாகட்டும் (== பலிக்கட்டும்) என்று. 


"எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்" என்று பாரதியார் வேண்டினாரே அதுபோல.