Sunday, September 4, 2011

"வட சொல்" ... தொல்காப்பியர் அடிச்சுவட்டில் -- 2

உண்மையில் இந்தப் பதிவு "இயற்சொல்" பற்றி. பதிவின் தலைப்பு ஏமாற்றுகிறதா? இல்லை.
 
"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே"

என்று ... யாரேனும் தமிழ்ச்செய்யுள் செய்யவேண்டினால் ... பயன்படுத்தக்கூடிய சொல்வகைப் பட்டியல் ஒன்றைத் தொல்காப்பியர் கொடுத்தாரா. சரி.

இந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொன்றின் வரையறையும் பிற ஒன்றை நோக்கியதே. 

அதாவதுங்க ... relativity-னு ஆங்கிலத்துலெ சொல்றாங்களே அந்த மாதிரி. எல்லாச் சொல்லும் தொடர்பு உடையனவே. Context இல்லாட்டி, ஒரு சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிந்துகொள்ள முடியாது. 

சரி. நம்ம வீட்டுப் பக்கமே பாப்பமே. யாராவது "அக்கா / அண்ணன்"-னு சொன்னா அந்தச் சொல் வேற இன்னோண்ணையும் குறிக்குது-னு புரிஞ்சுக்காட்டி ... அந்த "அக்கா / அண்ணன்"-ன்ற சொல் சரியா வெளங்காது, இல்லையா? "அக்கா / அண்ணன்"-னா அதுக்கு எங்கெயோ ஒரு "தம்பி"யோ "தங்கச்சி"யோ இருக்கோணும், இல்லையா? அதே போல .

அப்படித்தான் இந்த நான்கு வகைச் சொற்களையும் -- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் -- பார்க்கவேண்டும்.  

அதாவது ... ஒன்றன் வரையறையைப் புரிந்துகொள்ளாமல் அதைப் பற்றியோ மற்றதைப் பற்றியோ சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

எனவே, முதலில் தொல்காப்பியர் சொன்ன "இயற்சொல்" என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள முயலுவோம்.

++++++++++++++++++++++++++++++++++++++

இயற்சொல்
------------------

இளம்பூரணர் என்ற உரையாசிரியர் சொல்கிறார்: "இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நாட்டு விகாரமின்றித் தமிழியற்கை யிலக்கணப்பாடு செவ்வனுடைய சொல்."

அதாவது ... இன்னைக்கு நாம சொல்லப்போனா இப்படிச் சொல்லலாம்: "இயற்சொல் என்றால் ... தமிழ் மொழி வழங்குகின்ற நாட்டில் இருக்கும் ஒரு சொல். அது, அதை உள்ளது உள்ளபடியே எடுத்து, தமிழ் இலக்கணத்துக்கு மாறுபாடு இல்லாமல் செய்யுளில் பயன்படுத்தக் கூடிய சொல்." 

தொல்காப்பியர் வரையறுக்கிறார்:

"இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம் பொருள் வழாஅமை இசைக்கும் சொல்லே"

ஆ? அப்டினா என்ன?

இளம்பூரணர் சொல்கிறார்: 

"மேற்சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் இயற்சொல் என்று கூறப்படுவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழாமல் நடக்கும் சொல்."

அதாவது: "தொல்காப்பியர் தமிழ்ச்செய்யுள் செய்ய நாலு வகைச் சொற்களைப் பயன்படுத்தலாம்-னு சொன்னார், இல்லையா? அதுலெ 'இயற்சொல்' அப்பிடி-ங்கிறது ... 'செந்தமிழ் நிலம்' அப்டினு ஒரு எடத்துலெ இருக்றவங்க எந்த ஒரு சொல்லை எந்த ஒரு பொருளில் / அர்த்ததுலெ பயன்படுத்துறாங்களோ, அந்தச் சொல்லை அதே பொருளில் அப்படியே பயன்படுத்துறது."

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு: 

"அவை: சோறு, கூழ், பால், பாளிதம் என்னும் தொடக்கத்தன."

ஆ? அப்படியா? நாங்க "செந்தமிழ்" நாட்டுக்காரங்கதான்; எங்க ஊர்லெ யாரும் "பாளிதம்"-னு சொல்ற வழக்கமே இல்லெ. இதென்ன குழப்பம்? 

பொறுங்க. "செந்தமிழ் நிலம்"-னா எது-னு தெரிஞ்சிக்குவோம்.

"செந்தமிழ் நிலம் என்பது வையயாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு."

இந்தப் பகுதி தொல்காப்பியர் காலத்தில், இளம்பூரணர் காலத்தில் எங்கே இருந்தது, இப்போது எங்கே இருக்கு-னு யாராவது தெளிவா சொன்னால் நல்லது.

(அடுத்து வரும் ... திரிசொல் பற்றி)















No comments:

Post a Comment