Sunday, April 13, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 5

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 5

--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் “சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்றும் பார்த்தோம்:  http://mytamil-rasikai.blogspot.com/2014/01/3.html


"உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு"  இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html

****************

இந்தப் பதிவில் இழிந்தோன், உயர்ந்தோன், இழிசினன், இழிபிறப்பாளன் பற்றிப் பார்ப்போம். 

கொஞ்சம் நீளமான பதிவு. படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை. 

++++++++++++++++++++++++ 

இலக்கியத்தில்
——————
எனக்குப் புலப்பட்ட அளவில், சங்கப் பாடல்களில் ‘இழிந்தோன்’ என்ற சொல்லாட்சி இல்லை. இருந்தால் தெரிவிக்கவும், என் சேவியில் சேர்த்துக்கொள்வேன். 

இழி’ என்ற அடிச்சொல்லிலிருந்து கிளைத்துக் கிடைத்திருக்கும் சொற்களும் ’உயரமான ஒர் இடத்திலிருந்து (physical location) அந்த இடத்தை விட்டுக் கீழே இறங்கிய/வழிந்த நிலையையே சுட்டுகின்றன: இழிந்தனன் (அகநானூறு 66:13), இழிந்தாங்கு (அகநானூறு 197:12)

சங்க மருவிய இலக்கியமான மணிமேகலையிலும் அவ்வாறே: இழிந்தனன் (14:82) இழிந்தோன் (10:33; 14:83) 

அதற்கு ஏற்பாக, ‘ஏறினன்’ (மணிமேகலை 14:83) என்ற சொல் தாழ இருந்த இடத்திலிருந்து உயரமான இடத்துக்குச் சென்ற நிலையையே குறிக்கிறது. 

இந்தச் சங்க, சங்க மருவிய, பாடல்களில் பயிலும் சொல்லாட்சிகளில் சாதி, குலம், கோத்திரம் போன்ற குறிப்புக்கு இடமேயில்லை. 


இலக்கணத்தில்
———————
இலக்கணத்தில் சற்று வேறான நிலையைக் காண்கிறோம். அங்கே வருண அடிப்படையில் உருவான சொல்லாட்சி கிடைக்கிறது. 

‘இழிந்தோன்’ (தொல்காப்பிய உரை)

‘இழிந்தாராவார்’ (தொல்காப்பிய உரை):
“அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் அரசர்க்கு ஏனையிரண்டு குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் வணிகர்க்கு வேளாண்குலத்தில் கொடுக்கப்பட்டாரும்.” 

[அதாவது: 

A, B, C, D என்பவை முறையே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பவரைக் குறிப்பதாகக் கொள்வோம். இவர்களுள் அந்தணன் ஒருவன் அரசர் குலத்துப்பெண், வணிகக் குலத்துப் பெண், வேளாண் குலத்துப்பெண் இவர்களைக் காமக் கிழத்தியாகக் கொள்ளலாம். அரசன் ஒருவன் வணிகக் குலத்துப் பெண், வேளாண் குலத்துப்பெண் இவர்களைக் காமக் கிழத்தியாகக் கொள்ளலாம். வணிகன் ஒருவன் வேளாண் குலத்துப் பெண்ணைக் காமக் கிழத்தியாகக் கொள்ளலாம். 

இந்த இணைப்பில் பிறக்கும் பிள்ளைகள் ‘அநுலோமர்’ (A, B, C, D —> AB, AC, AD; BC, BD; CD) என்ற கருத்து கிடைக்கிறது. இது இன்னொரு நூற்பாவின் உரையிலும் விளக்கமாகக் கிடைக்கிறது. தேவையானால் பிறகு விளக்கம் சொல்வேன். ]


இழிந்தோர்’ என்ற சொல் இறையனார் களவியல் உரையில் வாணிகரையும் வேளாளரையும் குறிக்கிறது  (சூத்திரம் 39, உரை)

அதே உரையில் காண்பது:  
உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும். 
உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசருமே யாகலான்  

உயர்ந்தோர்’ பற்றிய இதே கருத்தை இறையனார் களவியலின் 38-ஆம் சூத்திரத்தின் உரையிலும் காணலாம்: “உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும். உயர்ந்தோராவார் பார்ப்பாரும் அரசருமே …”

இழிந்தார்'  என்ற சொல் பற்றி இறையனார் களவியலில் சூத்திரம் 39-க்குக் காணும் உரையில்: 

"இழிந்தோர்க்கு உரிய என்பது என்பது வாணிகர்க்கும் வேளாளர்க்கும் கிழமையுடைய என்றவாறு. ஒழிந்தார் என்பது பொருவிறப்பினோடு மாறுகொள்ளும் எனின், கொள்ளாது. இந்நூல் உலகினோடு ஒத்தும் ஒவ்வாதும் நடக்கின்றதாகலான் உலகியல் நோக்கிச் சாதிவகையான் இழிந்தார் எனப்பட்டது. ஒழிந்தனவற்றால் பொருவிறப்பு இருவர்க்கும் ஒக்கும் என்பது.

உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசரும். 
உயர்ந்தோர் என்பார் பார்ப்பாரும் அரசருமே யாகலான்  " 

எனக்குத் தெரிந்த அளவில், இங்கேதான் “சாதிவகையான் இழிந்தார்” என்ற கருத்து முதல் முறையாக வெளிப்படையாகிறது! 

பிறகு இளம்பூரணர் உரையில் காண்பது: “தன்மை என்பது — சாதியியல்பு" என்றும், “பார்ப்பார் அரசர் இடையர் குறவர் என்று இன்னோர் மாட்டு ஒருவரையொருவர் ஒவ்வாமல் கிடக்கும் இயல்பு" என்றும் காண்கிறோம். 

நன்னூலார் “சாதி" என்பதைக் “குணம்" என்று கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது! பெயர்ச்சொற்களின் வகைகளைக் குறிக்கும்போது “… … சாதி குடி சிறப்பு ஆதிப் பல் குணம்" என்று சொல்லி இவை ஆண் பெயர் உருவாக்கத்துக்கு அடிப்படை என்று சொல்கிறார். 

ஆக, இலக்கண நூல்களில் “சாதி" என்ற கருத்து எப்போது எப்படி உருவானது என்பதைப் பார்க்கிறோம். 

++++++

இழிசினன், இழிபிறப்பாளன்
———————————
“இழிசினன்” “இழிபிறப்பாளன்” என்ற சொற்களை அறிந்துகொள்ள முயல்வோம். இந்தச் சொற்களைப் பற்றிப் பலரும் அலசியிருக்கிறார்கள். எனக்குப் புலப்பட்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 


இழிசினன்
—————
ஓலைச்சுவடிகளில் எப்படியிருக்கிறதோ இன்று நமக்குக் கிடைத்திருக்கும் வடிவம்: “இழிசினன்.”

சங்கப்பாடல்களில் 3 இடங்களில் இச்சொல் காணுகிறது: 
“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது”
“மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே”
“எறிகோல் கொள்ளும் இழிசின”


சங்க மருவிய இலக்கியமான சிறுபஞ்சமூலத்தில் காண்பது: 
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈதல் கடன்" 
[பாட வேறுபாடு: இழியினர்] 

இது ஒரு முக்கியமான கருத்தாகத் தெரிகிறது. ‘இழிசினர்க்கு உணவு கொடுப்பது கடன்’ என்று ஏன் சொல்லவேண்டும்? 

துருவித் துருவிப் பார்த்தபோது நான் கண்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.  

பழமொழி நானூறு என்ற சங்க மருவிய இலக்கியத்தில் காண்பது:
“கடிஞையில் கல் இடுவார் இல்.” கடிஞை என்பது பிச்சைப்பாத்திரம். இந்தப் பழமொழியின் பொருள் எனக்குப் பல நாள் புரியாமல் இருந்தது, பிறகு மணிமேகலையில் உதவி கிடைத்தது. 

சிறுபஞ்சமூலத்தில் காணும் “இழிசினர்" [பாட வேறுபாடு: ‘இழியினர்’] என்ற சொல்லுக்கும் பழமொழி நானூற்றில் காணும் “கடிஞையில் கல் இடுவார் இல்” என்ற மொழிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிய மணிமேகலையில் காணும் ஆபுத்திரன் கதை உதவுகிறது. 

சங்க மருவிய இலக்கியமான மணிமேகலையில் காண்பது: 
வாரணாசியில் வாழ்ந்த சாலி என்ற ஒரு பார்ப்பினி (மறையோதும் ஒருத்தனின் மனைவி) இல்லற முறையிலிருந்து வழுவிக் கணவனல்லாத ஒருவனின் தொடர்பால் கருக்கொண்டதால் அடிக்குப் பயந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தென்னகக் குமரியை நோக்கி வந்த போது ஒரு தோட்டத்தில் பெற்றுக் கைவிடப்பட்ட குழந்தை ஆபுத்திரன். அந்த ஆபுத்திரன் ஒரு மறையோம்பாளரால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டாலும், வேத நெறியை, குறிப்பாக வேள்வியை, மறுத்த போது அவனை வளர்த்தவர் அவனைக் கைவிட, ஊர் மக்கள் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் உணவுக்கு மாறாகக் கல்லைப் போட்டார்கள்

அதைக் கடிந்த பழமொழி நானூறு “கடிஞையில் கல் இடுவார் இல்” என்று குறிக்கிறது என்று எடுத்துக்கொள்கிறேன். [ஒருவேளை இது வைதிக/பவுத்த/சமணக் கொள்கைகளின் வேறுபாட்டைச் சுட்டலாம், தெரியவில்லை.]

இங்கே தெரிந்துகொள்ளவேண்டியது: 

ஆபுத்திரன் ஒரு ‘புலைமகன்,’ அதாவது பரத்தமையில் பிறந்தவன். தாய் சாலி (ஒரு பார்ப்பினி) தன் இல்லற முறையிலிருந்து பிறழ்ந்து வேறொருவனுடன் கொண்ட தொடர்பால் பெற்ற பிள்ளை ஆபுத்திரன். அந்த ஆபுத்திரன் வேத நெறியை மறுத்தபோது அவனுக்கு ஊராரின் ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆபுத்திரன் போன்றவரையே (அதாவது, பரத்தமையில் பிறந்தவர்களைச்) சங்க இலக்கியமும் சங்க மருவிய இலக்கியமும் “இழிசினர்" என்று குறித்திருக்கவேண்டும். 



பிற்காலத்தில் இலக்கண நூலில் “இழிசினர்" என்ற சொல் காணுகிறது. நன்னூல் நூற்பா 266-க்கு மயிலைநாதர் சொன்ன உரையிலிருந்து ‘சோற்றைச் சொன்றி என்று சொல்வது இழிசினர் வழக்கு' என்று தெரிந்துகொள்கிறோம். 

இங்கே எந்தச் ‘சாதி' பற்றிய குறிப்புமில்லை. தொழிலடிப்படையில் அமைந்த பெயர்களாகிய தச்சர், கொல்லர் ஆகியவை குறிக்கும் மக்கள் தங்களுக்குள்ளே புழங்கும் குழூஉக்குறிச் சொற்களைப் போலவே ‘சொன்றி' என்ற சொல்லையும் மயிலைநாதர் குறிக்கிறார். 

‘சொன்றி' என்ற சொல் சங்கப்பாடல்களில் பயிலுவது பலருக்கும் தெரியும். 

அந்தப் பாடல்களிலிருந்து தெரியவருவன:

1. சோறு என்பதும் சொன்றி என்பதும் வேறு வேறு.
2. ஊன் கலந்த சோறு சொன்றி.
3. இரப்பவர்க்கு ஈயப்பட்டது சொன்றி. 

ஆகவே, ஊன் கலந்த சோறு உண்பவரும் இரப்பவரும் ஒரு காலத்தில் (மயிலநாதர் காலத்தில்?) ‘இழிசினர்' என்று கருதப்பட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது.  


இழிபிறப்பாளன்
—————— 
இதுவும் ‘இழிசினன்' என்ற சொல்லைப் போன்று தெரிகிறது. ஒருவேளை செய்யுள் யாப்பு அமைப்புக்காக இழிசினன் என்ற சொல் இழிபிறப்பாளன் என்று உருவாகியிருக்கலாம். இழிசினன் — நிரை-நிரை; ‘இழிபிறப் பாளன்’ — நிரை-நிரை நேர்-நேர். 

அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் என்று அமைந்த குலங்களுள் ஒரே குலத்துப் பெண்ணும் ஆணும் கூடிப் பெறாத பிள்ளை ‘இழிபிறப்பாளன்.’ இதைத் தொல்காப்பிய நூற்பாக்கள் பலவற்றின் உரைகளிலிருந்து புரிந்துகொள்கிறேன். 

(தொடரும்)