Friday, December 21, 2012

மணிமேகலை -- உருவத்தோற்றம் ... (1)

மணிமேகலை என்று தமிழில் ஒரு காப்பியம் உண்டு என்று பலருக்கும் தெரியும். காப்பியத்தலைவி யார் என்றால், மணிமேகலை என்ற ஒருத்தி என்றும் தெரியும்.
  
அந்த மணிமேகலையைப் பற்றி இந்தக் காலத்தில் பல நூல்கள் இருப்பதாகவும் இணையத்தில் கட்டுரைகள் இருப்பதாகவும் தெரிகிறது.


**********************************************

முன்னாளில்
----------------
தமிழ் முதுகலை வகுப்பில் படித்த காலத்தில்,  என் மதிப்பிற்குரிய அன்பு நிறைந்த பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எங்களுக்கு மணிமேகலைப் பாடம் கற்பித்தார். அந்தக் காலத்தில், மாணவர்கள் ஆசிரியரைக் கேள்வி கேட்பது அரிது. அவர் சொன்னதை அப்படியே கேட்டுக்கொள்ளவேண்டும். ஆனாலும், அந்த ஒடுக்கத்தை மீறி ஔவையிடம் நான் கேட்ட பல கேள்விகளுள் ஒன்று மணிமேகலையின் உருவத்தோற்றம் பற்றி.
  
  
மணிமேகலை என்ற பெயரைக் கேட்டவுடனே பலரும் நினைப்பது ஒரு பெண் துறவியை. அந்தப் பின்னணியில்தான் நானும் மணிமேகலைக் காப்பியத்தைக் கல்லூரியில் படித்தேன். ஆனால் ஒரு பெண் துறவி எப்படியிருப்பாள் என்ற விளக்கம் கிடைத்ததில்லை. அன்றாட வாழ்க்கையிலும் பெண் துறவிகளைப் பார்த்ததில்லை. பார்த்த ஆண் துறவிகள் சிலர் சடாமுடி வைத்திருந்தார்கள், சிலர் தலைமயிரை மழித்திருந்தார்கள். இந்த அமைப்பில் மணிமேகலையைக் கற்பனை செய்திருந்தது என் மனம்.
  
அதனால் காப்பியத்தில் மணிமேகலையைக் குறிக்கும் "அணிப்பூங்கொம்பர்," "மணிப்பூங்கொம்பர்," "ஆயிழை," "அணியிழை" இன்ன பிற சொற்கள் எனக்குக் குழப்பம் தந்தன. ஆசிரியரிடம் கேட்டேன் -- காப்பிய ஆசிரியர் (சீத்தலைச் சாத்தனார்) ஒரு துறவிப் பெண்ணை ஏன் இப்படி வருணிக்கிறார் என்று. ஆசிரியர் சொன்னார் அது பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபு என்று. எனக்கு அந்த விடை அமைதி தரவில்லை. ஆனால், மேற்கொண்டு கேள்வி கேட்க முடியாத வகுப்புச் சூழ்நிலை.

பிற்காலத்தில்
-------------------
நான் தமிழாசிரியையாகப் பணி செய்த காலத்திலும் பின்னாளில் ஆய்வுக்களத்தில் மணிமேகலைக் கதையைப் பலமுறை படித்தபின்பும் மணிமேகலையைப் பற்றி எனக்கு ஒரு விடை கிடைத்தது. மணிமேகலைக் காப்பியத்தில் சொல்லப்பட்ட மணிமேகலை காப்பியம் முழுவதிலும் துறவி இல்லை. காப்பியத்தின் கடைசி வரியான "பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றனள்" என்ற வரியில்தான் மணிமேகலையின் துறவு பற்றிச் சொல்லப்படுகிறது.

துறவற நிலைக்குச் செலுத்தப்பட்ட ஓர் இளம்பெண்ணின் கதையே இந்த மணிமேகலைக் காப்பியம். மணிமேகலை ஒரு கணிகையாகவும் வாழ்ந்ததில்லை. அவளுடைய தாய் மாதவியைப் போல நாட்டியத்தில் தேர்ச்சி பெறவுமில்லை. நாம்தான் மணிமேகலை என்ற காப்பியம் ஒரு பெண் துறவியைப் பற்றிய கதை என்றோ ஒரு நாட்டியக்காரியின்/கணிகையின் கதை என்றோ மாறாகச் சொல்லிவருகிறோம்.

காப்பியம் முழுவதிலும் மணிமேகலை ஒரு சாதாரணப் பெண்ணாகவே காட்டப்பட்டிருக்கிறாள். ஒரு சாதாரணப் பெண்ணுக்கு இருக்கும் உணர்ச்சிகள் அனத்தும் அவளுக்கு உண்டு. இதை மிக நுணுக்கமாகக் காப்பிய ஆசிரியர் காட்டிப் போகிறார். இதைப் பிறகு பார்ப்போம். 
   

*************************************************


அண்மையில் , இணைய காலத்தில்
------------------------------------------------ 
நெடுநாட்களாக மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள ஒரு சொல்லுக்கு உரையாசிரியர்கள் தந்த விளக்கம் சரியென்று தோன்றாததால் குழம்பிக்கொண்டிருந்தேன். அந்தச் சொல்லைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். என் குழப்பத்துக்குத் தெளிவு தேவையாக இருந்தது. அதனால், மணிமேகலையின் உருவத்தோற்றம் பற்றி எனக்குத் தெரியவேண்டியிருந்தது. 

மணிமேகலையின் தோற்றத்தை யாராவது ஓவியமாக வரைந்திருக்கலாம் என்று நினைத்து இணையத்தில் தேடிப் பார்த்தபோது பல படங்கள் கிடைத்தன.

படங்களுக்கு நன்றி: இணையம் + நூல், கட்டுரை ஆசிரியர்கள் + ஓவியர்கள்


படம் 1

படம் 2
படம் 3
படம் 4

 
 
படம் 5
 

 
படம் 6

 
படம் 7
படம் 8

படம் 9

****************************************************


மேலே உள்ள படங்கள் மலர்வனத்தில் மணிமேகலையையும் (படம் 1) பிச்சைப்பாத்திரம் ஏந்திய மணிமேகலையையும் (படங்கள் 2-8) இக்கால நாடகத்தில் மணிமேகலை நடிப்பது மாதிரியான நிலையையும் (படம் 9) குறிக்கிற மாதிரித் தெரிகின்றன.

ஆனால், படங்களில் உள்ள மணிமேகலைக்கும் காப்பியத்தில் உள்ள செய்திகளுக்கும் 100% என்ற அளவில் பொருத்தம் இல்லை.

படம் 1 காட்டுவதுபோல் ... காப்பியத்தில் மணிமேகலையும் உதயகுமரனும் இவ்வளவு அணுக்கத்தில் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவேயில்லை. உதயகுமரன் தேரில் வந்தபோது மணிமேகலையைப் பார்க்கவேயில்லை. அணுக்கத்தில் வந்தபோது சுதமதியைத்தான் பார்க்கிறான். அப்போது மணிமேகலை பளிக்கறைக்குள் இருக்கிறாள். பளிக்கறைச் சுவர் வழியேதான் மணிமேகலையின் உருவம் உதயகுமரனுக்குத் தெரிகிறது. அவ்வளவே. 

படங்கள் 2-4 காட்டுவது மணிமேகலை தன் பிச்சைப்பாத்திரத்திலிருந்து உணவை எடுத்துப் பசித்தவர்களுக்குக் கொடுக்கும் நிலை. பொருள் சரியே. ஆனால் அப்போது அவளுடைய கோலம் ஒரு பிக்குணிக்கோலமாக இருக்கவேண்டும். இந்தப் படங்களில் உள்ளவள் ஒரு பிக்குணியா? அதோடு, பிச்சை ஏற்றுக்கொள்ளும் மக்களும் "பசி தின வருந்திய பைதல் மாக்க"ளாக, அதாவது, பசித்துன்பத்தால் வருந்திய மக்களாகக் காட்டப்படவில்லை. அவர்கள் நல்ல உடையெல்லாம் போட்டிருப்பதாகவும் தெரிகிறது. காப்பியம் சொல்லும் அவல நிலையில் உள்ள மக்களை இந்தப் படங்கள் காட்டவில்லை. 

படங்கள் 5-8 மணிமேகலையை ஒரு பிக்குணியாகக் காட்ட முயல்கின்றன. ஆனால், இதுதான் பிக்குணிக் கோலமா? இல்லை. சில படங்களில் உள்ளதுபோல, பிக்குணிகள் உருத்திராக்க மாலை அணிந்தார்களா? இல்லை என்று நினைக்கிறேன். காப்பியமும் மணிமேகலையை உருத்திராக்கம் அணிந்தவளாகச் சொல்லவில்லை. 

படம் 9 பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

****************************************

இந்தக் காப்பியத்தில் என்னைக் கவரும் ஒரு புதுமைக்கூறு என்ன என்றால் ... காப்பியத் தலைவியும் (மணிமேகலை) காப்பியத் தலைவனும் (உதயகுமரன்) இணையாதது மட்டுமில்லை, அவர்கள் இருவரும் "மணிமேகலை"யாகவும் உதயகுமரனாகவும் அணுக்கத்தில் நேருக்கு நேர் பார்த்து உரையாடவும் இல்லை. ஆ, இது உண்மையா என்று கேட்கலாம். ஆம், உண்மை. விளக்கத்தை அடுத்துக் காண்போம்.

மலர்வனத்தில் மணிமேகலையைப் பளிக்கறைச் சுவர் வழியேதான் பார்க்கிறான் உதயகுமரன். அவன் பார்த்த வடிவும் பல உருவங்களாகத் தோன்றி அவனைக் குழப்புகிறது. அதனால், உண்மையான "மணிமேகலை" உதயகுமரனுக்குப் புலப்படவில்லை.

அடுத்து உதயகுமரன் அவளைப் பார்ப்பது ஊர் அம்பலத்தில்.  தன் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி மணிமேகலையைத் தேடி வந்த உதயகுமரன் ஒரு பிக்குணியைப் பார்க்கிறான். அந்தப் பிக்குணிக்கோலத்தின் உள்ளே மறைந்திருக்கும் "மணிமேகலை"யைப் பார்க்க முடியவில்லை. 

பிக்குணிக் கோலத்தில் இருக்கும் மணிமேகலை, உதயகுமரனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தெய்வம் கொடுத்த மந்திரத்தை ஓதிக் காயசண்டிகையாக உருவெடுக்கிறாள். இப்போது காயசண்டிகையைப் பார்க்கிறான் உதயகுமரன். அந்த உருவத்தைக் கண்ட உதயகுமரனுக்கு அவள் உண்மையில் மணிமேகலை என்று தெரியவில்லை. ஆக, இப்போது காயசண்டிகை வடிவத்தின் உள்ளே மறைந்திருக்கும் மணிமேகலையை அவன் பார்க்கவில்லை.

அவன் கொலைப்பட்டு இறக்கும்வரை மணிமேகலை காயசண்டிகை உருவில்தான் இருக்கிறாள். அவன் கொலைப்பட்டு இறந்ததை அறிந்து உடனே காயசண்டிகை வடிவத்தை மாற்றி உண்மையான மணிமேகலை வடிவத்தைப் பெறுகிறாள். அவன் உடலைத் தழுவ விரும்பி அவன் பக்கம் வருகிறாள். தெய்வம் தடுத்துவிட அவன் உடலை அவள் தொடவில்லை. அந்தோ, தனக்காகப் பரிதவித்த அந்த உண்மையான மணிமேகலையை அவ்வளவு அணுக்கத்தில் பார்க்க உதயகுமரன் உயிரோடு இல்லை.


இப்படி, மணிமேகலை --> பிக்குணிக்கோலம் --> காயசண்டிகை உருவம் --> மணிமேகலை என்றும், பிறகு மணிமேகலை --> ஆண்மைக்கோலம் --> மணிமேகலை என்று பல நிலைகளிலும் இந்தக் காப்பியத்தலைவியைப் பார்க்கிறோம். 

  
  
(தொடரும்)  





  
  



Sunday, January 8, 2012

திருவாதிரை -- அப்பர் நோக்கில் ...

"திரு ஆதிரைத் திருப்பதிகம்"
-----------------------------------

தேவார மூவருள் அப்பர் பாடிய ஒரு தேவாரப் பதிகம் "திரு ஆதிரைத் திருப்பதிகம்" என்று தொகுக்கப்பட்டிருக்கிறது.

திரு ஆரூர், திரு ஆதிரைத் திருப்பதிகம், குறிஞ்சி(ப் பண்)

(நன்றி: திருவாளர்கள் கோபாலையரும் ஃபிரான்சுவா க்ரோ அவர்களும் சேர்ந்து பதிப்பித்த வெளியீடு. Institut Français D'Indologie, Pondichery, 1985)
++++++++++++++++++++++++++++++++++

முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்:-
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

மணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்:-
"மணியே! பொன்னே! மைந்தா! மணாளா!" என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

வீதிகள்தோறும் வெண் கொடியோடு விதானங்கள்;
சோதிகள்விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்:-
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்--
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

நிலவெண்சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்லவடங்கள் பரந்து, எங்கும்
கலவமஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;
தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார்:-=
"எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன்" என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

செந்துவர்வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்;
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்:--
இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

முடிகள்வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,
வடிகொள் வேய்த்தோள் வான் அர மங்கையர் பின் செல்ல,
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ,
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

"துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்" என்பாரும்,
"இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள்" என்பாரும்,
"நுன்பின் எம்மை நுழையப் பணியே!" என்பாரும்:--
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன்தன் ஆதிரை நாளால் அது வண்ணம்! 

+++++++++++++++++++++++++++++++++++++
இங்கே அப்பர் தேவாரப் பாடல்களின் வரிகளில் சொற்கள் எளிமையாகப் பிரித்து இருப்பதால், அந்தச் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வதில் தடை இருக்காது என்று தோன்றுகிறது.

அதற்கும் அப்பால் நமக்குக் கிடைக்கும் விவரங்கள் அன்றைய காலத்து, அதாவது அப்பர் காலத்து, நிலையை நாம் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல ஆவணம். 

திரு ஆதிரை நாளில், திரு ஆரூரில் அப்பர் கண்ட காட்சியை இங்கே படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இன்றைக்கு அங்கே திருவாரூரில் நடப்பது என்னவோ/எப்படியோ, தெரியவில்லை. ஆனால், இந்த அப்பர் பதிகம் ஒவ்வோர் ஆண்டும் திருவாதிரை நாளில் என் கற்பனையை/மனதை நிறைவு செய்துவருகிறது.

+++++++++++++++ 

அதெல்லாம் கிடக்கட்டும். சாப்பாடு? அதுதானே நம் பண்டிகைகளில் முக்கியமானது?

ஒவ்வோர் ஆண்டும் என் அம்மா செய்த திருவாதிரைக் களி அல்வா போல இருக்கும்! அந்தத் "தாளகம்" ஊரைக் கூட்டும் மணம். அந்தக் கலயை அவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். பல ஆண்டுகள் இங்கேயும் களியும் தாளகமும் தவறாமல் செய்தது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக எல்லாக் கடவுளருக்கும் நான் "லீவு" கொடுத்துவிட்டேன் -- "எனக்கு ஒடம்பு சௌகரியம் இல்லெ"-னு. 

இனிமேல் அந்தக் கடவுளா வந்து வேண்டினால்தால் என்னால் எதுவும் செய்ய முடியும். என்னைப் படைத்தும் இயக்கியும் ஆட்டியும் வைப்பவன் அவன்தானே? அப்பொ ... அவனுக்கு வேணும்-னா எனக்கு வேணுங்க்றதெ அவன் செய்யணும். இது நல்ல பிடிவாதம், இல்லையா?

பார்ப்போம். கைலெ கெடெக்கிற எதாவது ஒண்ணெ வச்சு ஒரு களி கிண்டி ஒரு தாளகமும் வெக்கப் பாக்கிறேன்; ஆனா எப்போ-னு சொல்ல முடியாது. முடிஞ்சப்போ செய்வேன்; என்னப் படைத்த அவனும் ஏற்றுக்கொள்வான்; அவனுக்கு வேறு வழியில்லை! :-) :-) :-)