Wednesday, January 29, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 3

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 3

--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் “சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

இந்தப் பதிவில் ‘புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்ப்போம். 

கொஞ்சம் நீளமான பதிவு. படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை. 

++++++++++++++++

‘புலையன்’
———————— 
‘புலையன்’ என்பவன் யார்?

1. புலையன் என்பவன் போரில் ஈடுபட்டிருக்கிறான்; துடி, தண்ணுமை என்ற பறை/முழவுகளை இயக்கியிருக்கிறான் (நற்றிணை 77:1-2, நற்றிணை 347:5-6; புறநானூறு 287:1)

2. புலையன் என்பவன் ஈமச் சடங்கில் ஈடுபட்டிருக்கிறான் (புறநானூறு 360).

3. புலையன் என்பவன் பாணன் என்பவனுடன் இணைந்து திரிந்திருக்கிறான் (கலித்தொகை 85:22).  

4. புலையன் என்பவன் தலைவனின் பரத்தமைக்கு உதவியிருக்கிறான் (கலித்தொகை 68:19; 85:22-25). 

‘புலைத்தி’
————————
'புலைத்தி' என்பவள் யார்?

1. 'புலைத்தி' என்பவள் ஊரவர் ஆடையைத் துவைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறாள் (அகநானூறு 34:11; அகநானூறு 387:6-8; கலித்தொகை 72:13-14; நற்றிண 90; புறநானூறு 311).

2. 'புலைத்தி' என்பவள் தலைவனுக்கும் பரத்தைக்கும் இடையே ‘தூது’ ஆக இருந்திருக்கிறாள் (கலித்தொகை 72:13-14).

3. 'புலைத்தி' என்பவள் பூக்கூடை செய்து விற்றிருக்கிறாள் (கலித்தொகை 117:7-11).

4. 'புலைத்தி' என்பவளுக்கு ‘முருகு’ தொடர்பாகப் பங்கு இருந்திருக்கிறது (புறநானூறு 259). 

++++++++++++++++

சற்றே பொறுமையோடு ஆழ்ந்து நினைத்துப் பார்க்கவேண்டிய கருத்துகள்
—————————————————————— 

புலையன் என்பவனைப் பற்றி … 
————————————
1. துடியை/தண்ணுமையை இயக்கிய எல்லாரும் ‘புலையரா’? இல்லவே இல்லை! 

1a. துடியை இயக்கியவர்களைப் பற்றிச் சங்கப்பாடல் சான்று: 
  • மழவர், மறவர் (அகநானூறு 35:4-6; அகநானூறு 89:10-14; கலித்தொகை 15)
  • கொடு வில் எயினர் (அகநானூறு 79:13-14)
  • கொடு வில் ஆடவர் (அகநானூறு 159:5-10)
  • ஆ கோள் ஆடவர் (அகநானூறு 372:10-12)
  • வயலில் இளநெல்லைச் சுற்றிப் புனல் பரந்தது என, துடி ஒலித்தல் (பரிபாடல் 7:27-28) 
  • துடிச்சீர் (பரிபாடல் 21:60, 64)
  • நெடு நிரை தழீஇய மீளியாளர், மறவர் (புறநானூறு 260:13-15)
  • உவலைக் கண்ணித் துடியன்; ஆநிரை கவர்தல் குறிப்பு (புறநானூறு 269:6 ). 

1b. தண்ணுமை முழக்கியவர்களைப் பற்றிச் சங்கப்பாடல் சான்று: 
  • வெண்ணெல் அரிநர் (அகநானூறு 40:13-14; அகநானூறு 204:10; நற்றிணை 350:1; புறநானூறு 348:1; மலைபடுகடாம்:471)
  • வேட்டக் கள்வர் சேக்கோளுக்காகத் தண்ணுமை அறைகிறார்கள் (அகநானூறு 63:17-18)
  • கல் கெழு குறும்பில் மறவர் தண்ணுமையின் பாணி எழுப்புகிறார்கள் (அகநானூறு 87:7-8)
  • பாணன் (அகநானூறு 106:12-13; நற்றிணை 310:9-10)
  • சிறு குடி மறவர் சேக்கோள் தண்ணுமை (அகநானூறு 297:16)
  • குறுகிய நீர்த்துறையில் செல்லுகிறவர்கள் தண்ணுமை முழக்குகிறார்கள். அவர்களின் பின்னே இயவரின் ஆம்பல் தீங்குழலொலி (ஐங்குறுநூறு 215:3)
  • ஏறுகோள் சாற்றுவார் தண்ணுமை முழக்கும் குறிப்பு (கலித்தொகை 102:35)
  • வேல் ஏந்தியவர்கள் காவல் காடுகளில் (மிளை) வந்து தண்ணுமை முழக்குகிறார்கள் (குறுந்தொகை 390:5), 
  • ஒரு நற்றிணைப் பாடலில் (130:2) தண்ணுமை முழக்கியவர் யார் என்ற தெளிவில்லை. ஆனால், ஊரின் நடுவே தண்ணுமை முழக்கம் நிறைந்து ஒலிக்கவும் அந்த மூதூரின் மக்கள் செந்நீரில் செய்யும் பொதுவினைக்காக வந்து சேருகிறார்கள் என்று தெரிகிறது.
  • வழிப்போக்கர்களை அலைக்கும் ஆடவர்கள் தண்ணுமை முழக்குகிறார்கள் (நற்றிணை 298:3).
  • கைவல் இளையர் தண்ணுமை முழக்குகிறார்கள் (பதிற்றுப்பத்து 51:33-34).
  • போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு (பதிற்றுப்பத்து 84:15)
  • கழனி உழவர் (பதிற்றுப்பத்து 90:41)
  • வையைக் கரையில் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி எல்லாம் ஒத்து இசைக்கின்றன (பரிபாடல் 12:41).
  • தண்ணுமை பொதுவில் தூங்குகிறது! அப்படி என்றால் யார் வேண்டுமென்றாலும் எடுத்து அடிக்கலாம்! மள்ளர் என்ற குறிப்பும் இருக்கு (புறநானூறு 89:7).
  • மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை இன்னிசை கேட்ட துன்னரு மறவர் … (புறநானூறு 270:8)
  • பாசறை-ப் பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் (புறநானூறு 289:9-10)
    • (பாணனும் இழிசினனும் ஒரே பிறவி/ஆள் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது, இல்லையா.)
  • நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை (புறநானூறு 293:1-2) 
    • (அடடே, இங்கே புலையனா யானை மேலோன்?!!)
  • எயினர் குடியில். தண்ணுமை சிலைப்ப, கொண்டாட்டம். (பெரும்பாணாற்றுப்படை:137-147)

கருத்தில் கொள்ளவேண்டியதுதுடி, தண்ணுமை போன்ற தோற்கருவிகள் பல தேவைகளுக்காக ஒலித்திருக்கின்றன. மக்கள் பலரும் கூடிச் செய்ய வேண்டிய செயல்களை அறிவித்தற்பொருட்டு இந்தக் கருவிகள் ஒலித்திருக்கின்றன. அதனால் இங்கே புலையனை மட்டும் ஒதுக்கிப் பார்க்கத் தேவையில்லை. 

2. ‘புலையன்’ மட்டுமா ஈமச்சடங்கில் ஈடுபட்டான்? இல்லை. 

ஈமச்சடங்கு அல்லது இறந்தவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்த சங்கப்பாடல் சான்று
  • மறக்களவேள்வி செய்த வேண்மாள் (புறநானூறு 372:8)
  • தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாதவர்கள் (புறநானூறு 9:3-4)
    • இங்கே பொத்தியார் பாடலும் (புறநானூறு 222) நினைக்கத்தக்கது. தன்னுடன் உயிர்விடத் துணிந்த பொத்தியாரைத் தடுப்பதற்குக் கோப்பெருஞ்சோழன் சொன்னது: “புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா.”  ஆகவே, ஈமக்கடன் செய்ய ஒரு புதல்வன் தேவை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பொத்தியார் புலையரா? 
  • யாரோ ஒருவனை ‘இழிபிறப்பினோன்’ என்று  குறித்துப் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல் (363:14) ஒன்று இருக்கிறது.
    • சில ஓலைச்சுவடிகளில் ‘இழிபிறப்பினோன்’ என்ற பாடம் இல்லை. உ.வே.சா அவர்களே தம் பதிப்பில் இதைச் சுட்டியுள்ளார். எனவே, இங்கே ஈமக்கடன் செய்பவன் ‘இழிபிறப்பினோன்’ என்று கொள்ள உறுதியில்லை.
    • “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார்” என்று தொடங்கும் சங்கப்பாடலும் ஏதோ ஒருவகை ஈமச்சடங்கைத்தானே சொல்கிறது. அந்தச் சடங்கைச் செய்தவன் ‘புலையன்’ என்பவனா? 
3. புலையன் என்பவன் பாணன் என்பவனுடன் இணைந்து திரிந்ததாகச் சொல்லும் கலித்தொகைப் பாடலே (85:22) புலையனும் பாணனும் ஒருவரல்லர் என்பதுக்குச் சான்று. அதாவது, பாணன் == புலையன் என்ற சமன்பாடு தவறு. 

3a. “பாண் தலையிட்ட பல வல் புலையனை …” என்ற கலித்தொகை (#85) வரியில் உள்ள ‘தலையிட்ட’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். ‘தலையிட்ட’ என்றால் ‘முதலில் வைத்த’ என்பது பொருள். இந்த எளிய பொருளைத் தொல்காப்பிய நூற்பாக்களிலும் காணலாம் (எடுத்துக்காட்டு: புணரியல் 1, செய்யுளியல் 97). “பொழுது தலைவைத்த” என்று தொடங்கும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவும் (40) இதை உறுதிப்படுத்தும். இந்தக் கலித்தொகைப் பாடலில் தலைவியின் வீட்டுக்குள் பாணனை முதலில் நுழைய வைத்து அவன்பின்னே புலையன் வருகிறான் என்று எடுத்துக்கொள்வதே சரி.

3b. புறநானூற்றுப் பாடல் (289:8-10) வரிகள்: “கேட்டியோ வாழி, பாண, பாசறைப் பூக்கோள் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.” இங்கே, ‘இழிசினனின் தண்ணுமைக் குரலைக் கேட்டாயோ’ என்று பாணனை வினவுகிறார் புலவர். இது பாணனும் இழிசினனும் ஒருவரல்லர் என்பதுக்கு இலக்கியச் சான்று, இல்லையா?

4. தலவனின் பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவிய புலையன் (கலித்தொகை 68:19; 85:22-25) ‘கீழ்மகன்’ என்றால் பரத்தமையில் ஈடுபட்ட ‘தலைவன்’ எந்த வகையில் மேம்பட்டவனோ?!! பரத்தமையில் ஈடுபட்ட தலைவன் == புலையன் என்ற சமன்பாடே சரி! இதை ஏன் அகரமுதலிகள் கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பு!!!

5. ‘புலையனை’ மீனோடு (with fish) தொடர்புபடுத்தும் சங்கப்பாடல் சான்றுகள் என் கண்ணுக்குத் தென்படவில்லை. கிடைத்தால் சொல்லவும், நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.

5a. கிடைத்திருக்கும் அகரமுதலிகள் ‘புலை,’ ‘புலால்,’ ‘புலவு’ என்ற சொற்களின் வழக்காற்றைக் குழப்பியிருப்பதுபோல் தெரிகிறது. புலை == புலவு/புலால் என்பது சரியான சமன்பாடில்லை என்று தோன்றுகிறது. தொடரும் ஆய்வில் தெளிவு கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

6. ‘புலையன்’ என்பவன் ஊராருடைய ஆடைகளைத் துவைத்ததாக எந்தச் சங்கப் பாடலும் பேசவில்லை. ஆகவே, ‘புலையன்’ == ‘வண்ணான்’ என்று சொல்ல முடியாது.  

7. ‘புலையன்’ என்று குறிக்கப்படுகிறவனும் ‘இழிசினன்’ என்று குறிக்கப்படுகிறவனும் ஒரே மனிதன் அல்லன் என்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று (#287) சான்றாக அமைகிறது. 

7a. ‘துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின!” என்று தொடங்குகிறது இந்தப் பாடல். இதில் “இழிசின” என்ற சொல்லுக்குப் பாட வேறுபாடாக “அறிசன” என்ற சொல்லையும் குறித்த உ.வே.சா “இழிசின” என்ற சொல்லையே தம் பதிப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தச் சொல்லையே எடுத்துக்கொண்டாலும், புலையனும் இழிசினன் என்று குறிக்கப்படுகிறவனும் வெவ்வேறு ஆட்கள் என்பது இந்தப் பாடலின் கடைசி வரியைப் படித்தால் தெளிவாகும்: “இம்பர் நின்றும் காண்டிரோ …” என்று புலையனையும் இழிசினனையும் தனித்தவராகக் காட்டும் பன்மை விளியைப் பார்க்கிறோம். இலக்கணம் இங்கே உதவுகிறது. அதோடு, புலையன் எறியும் துடியை இயக்க, கோல் என்பது தேவையா என்றும் நினைத்துப் பார்க்கவேண்டும். தண்ணுமையை முழக்கக் கோல் தேவை (நற்றிணை 130:2). 

7b. “மடிவாய்த் தண்ணுமை இழிசினன்” என்று புறநானூற்றில் குறிக்கப்படுகிறவன் ‘புலையனா’ என்பது ஐயமே.

8. ‘புலையன்’ என்பவனையும் ‘ஊன்/இறைச்சி/மாமிசம்’ என்பதையும் தொடர்புபடுத்தி எந்தச் சங்கப் பாடலும் பேசவில்லை.

8a. ஈமச் சடங்கு ஒன்றைப் பற்றிக் கூறும் புறநாற்றுப் பாடலிலும் (360) கள், புல், அவிழ், வல்சி என்ற பொருட்களே குறிக்கப்படுகின்றன; ஊனை/இறைச்சியை/மாமிசத்தைக் காணோம்.


புலைத்தி என்பவள் பற்றி
——————————-
1. ‘புலைத்தி’ என்பவள் ஊரவரின் ஆடைகளைத் துவைப்பவளாகத் தெரிகிறாள் (கலித்தொகை 72). இங்கே, ‘ஊரவர்’ என்பவர் மருதநிலத்தவர் என்றும் பரத்தமையில் ஈடுபட்டவர் என்றும் பொருள் கொள்ளத் தடையிருக்கா? இல்லை.

1a. புலைத்திக்கும் குருதிக்கும், குறிப்பாகப் பெண்களின் மாதவிலக்குக் குருதிக்கும், எந்த வகைத் தொடர்பும் இருப்பதாகச் சங்கப்பாடல்கள் காட்டவில்லை. ஊரில் உள்ள மகளிருக்கு மாதம் ஒரு முறை உண்டாகும் குருதிப்போக்குக்கும் இவளுக்கும் தொழில் வகையில் தொடர்பில்லை. அதாவது, மகளிரின் குருதிக்கறை படிந்த ஆடையைத் துவைத்து இவளுக்குத் “தீட்டு” என்ற களங்கம் ஏற்பட்டதான குறிப்பு இல்லவே இல்லை. சங்கப்பாடல் சான்று கிடைத்தால் சொல்லுங்கள், நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுவேன்.

1b. மாறாக, (கேட்கத் தயக்கமாக இருந்தாலும் சொல்கிறேன்), புலைத்தியின் கைவிரல்கள் ‘பசை’யை நீக்குவதாகவும் அந்தப் பசை நீர்த்துறையில் வெளியேறியது மென்மையான மயிருடைய அன்னத்துக்கு உவமையாகவும் சொல்லப்படுகிறது (அகநானூறு 34:11; 387:5-7). ஆடையில் வெள்ளைப் பசை, அதைப் புலைத்தி தோய்த்துக் களைகிறாள். இது பெண்களின் மாத விலக்குக் குருதியா அல்லது வேறு எதுவுமா என்று நினைத்துப் பார்க்கவும். மாதவிலக்குக் குருதி ‘பசை’யாக உறையாது! 

2. புலைத்தி என்பவளை வறுமையில் வாடியவளாகச் சங்கப்பாடல்கள் காட்டவில்லை. ‘பசை கொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி’ என்று அவளுடைய தோள்கள் ‘பெருந்தோள்’ என்று சுட்டப்படுகின்றன (அகநானூறு 34:11). அவளே “பெருங்கை தூவா வறன்-இல் புலைத்தி” (நற்றிணை 90) என்றும் குறிக்கப்படுகிறாள்.

3. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (259) வரும் ஒரு தொடர் “முருகு மெய்ப்பட்ட புலைத்தி.” இதன் விளக்கமும் குழப்பமானதே. புலைத்தி என்பவள் ‘கோயில் பூசாரி’ என்ற பொருள் குழப்பம் தருகிறது. 'கோயில் பூசாரி' என்ற அளவில் கோயிலில் புலைத்தி என்னென்ன செய்திருக்கிறாள் என்ற குறிப்பு ஒன்றுகூட இலக்கியத்தில் இல்லை. ஆடை துவைக்கும் பெண்ணுக்கும் கோயில் பூசைக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. ஆய்வாளரும் விளக்கம் சொல்லவில்லை. ‘காம உணர்வு உடலில் வெளிப்பட்ட’ நிலையில் துடித்துத் துள்ளிய புலைத்தி என்று சாதாரணமான பொருளைக் கொண்டாலே போதும் என்று தோன்றுகிறது. அதோடு, ‘ தாவுபு தெறிக்கும் மானே’ என்பதைச் சிலர் ‘தெறிக்கும் ஆனே’ என்று கொண்டு ‘துள்ளும் பசு’ என்று பொருள் கொண்டிருக்கிறார்கள். அது சரியென்று தோன்றவில்லை. “தெறிக்கும்” என்ற வினை மான், மறிகளுக்கு உரியது, ஆவுக்கு/பசுவுக்கு இல்லை. மாற்றுச் சான்று கிடைத்தால் தெரிவிக்கவும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். 

++++++++++++ 

ஆக, ‘புலையன்,’ ‘புலைத்தி’ என்று சங்கப்பாடல்களில் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில்) குறிக்கப்படும் ஆட்கள் பிற ஆட்களைப் போன்றவரே. அவர்களைக் 'களங்கம் உடையவர்கள்; தீட்டுடையவர்கள்' என்று சொல்வதெல்லாம் சங்கப்பாடல்களைப் பொருத்த அளவில் நேரியதில்லை என்பது என் கருத்து. 

இன்றைக்கு, ‘புலையன்’ என்ற சொல்லைக் கேட்டவுடனே பலருக்கும் ஆகா, “ஆ உரித்துத் தின்று உழலும் புலையர்” என்ற தேவாரப் பாட்டு வரியும், நந்தனார், புலைச்சேரி, புலைப்பாடி பற்றிய சேக்கிழாரின் பெரிய புராணக் கதையும் முட்டிக்கொண்டு வந்து மனதில் நிற்கும். அவர்களுக்கு ஒரு சேதி: “சேரி” என்பது புலையருக்கு மட்டும் உரியதில்லை. பார்ப்பனருக்கும் உரியதே!!! இதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம். 

(தொடரும்)

Saturday, January 18, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 2

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 2
---------------------------------------------------------
சென்ற பதிவில் “சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்:
 (http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html). 

சுருக்கமாகச் சொன்னால், உலகத்து உயிர்களை நீர்வாழ்சாதி, பறவைச்சாதி, மக்கள்சாதி என்று பிரிக்கலாமேயன்றி இந்த உயிர்ச்சாதி ஒவ்வொன்றுக்குள்ளும் ‘சாதிப் பிரிவினை’யைச் சங்கப்பாடல்கள் காட்டுவதாகச் சொல்லுவது கருத்துப்பிழை என்று தெரிந்தது.

பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மக்களுள் பிரிவுகள் பெயர் வகையில் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கின்றன, “சாதி” வகையில் இல்லவே இல்லை


தமிழில் பெயர்ச்சொற்கள்
———————————
தமிழில் அடிச்சொல் (stem) அமைப்பு மிகவும் எளிமையானது; மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 தமிழ் எழுத்துக் கொண்டது. இங்கே ‘எழுத்து’ என்பது உயிரெழுத்து (‘அ’ போன்றவை), ஒற்றெழுத்து (‘ம்’ போன்றவை), உயிர்மெய்யெழுத்து (‘ளா’ போன்றவை) ஆகியவற்றைக் குறிக்கும். எடுத்துக்காட்டுச் சொற்களை மிக அழகாக யாப்பருங்கலக் காரிகை தருகிறது: ஆழி, வெள், வேல், வெறி, சுறா, நிறம், விளாம். 

சொல் உருவாக்கத்தின்போது, மேலே குறிப்பிட்ட அமைப்பில் உள்ள அடிச் சொற்களைத் தொடந்து சாரியை, வேற்றுமை உருபு, பெயர் விகுதி; காலம் குறிக்கும் இடைநிலை, வினை விகுதிஇன்ன பிற வந்து ஒரு சொல்லை உருவாக்கும். அப்போது குற்றியலுகரத்தில் முடியும் அடிச்சொற்களின் இறுதியில் உள்ள உகரம் மாய்ந்து கெடும். (விளக்கம் தேவையானால் கேட்கவும்!). 

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது: எந்தச் சொல்லாவது இரண்டு அடிச்சொற்களைக் கொண்டு அமையுமானால் அது முதல் கட்ட/நிலையைக் (primary formation) கடந்த இரண்டாம் கட்ட/நிலை உருவாக்கம் (secondary formation) என்று கொள்ளலாம். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு “இழிபிறப்பாளன்” என்ற சொல். ‘இழி’ என்ற அடிச்சொல்லுக்கு ஒரு பொருள்; ‘பிறப்பு’ என்ற அடிச்சொல்லுக்கு ஒரு பொருள். ‘இழி’ + ‘பிறப்பு’ என்ற இரண்டு அடிச்சொற்கள் சேர்ந்து ‘இழிபிறப்பு’ என்ற புதிய அடி (stem) உருவாகிறது. இந்த வகைக் கூட்டு உருவாக்கத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம்; அவற்றில் ஒன்றாகப் பிறமொழிக் கருத்தைத் தமிழில் சொல்ல முயன்ற முயற்சியாகவும் இருக்கலாமோ?

சொல் உருவாக்கத்தின் அடிப்படையில் சங்கப்பாடல்களில் வழங்கும் பெயர்ச்சொற்களைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. 

சங்கப்பாடல்களில் காணும் பெயர்ச்சொற்கள்
—————————————————------
சங்கப்பாடல்களில் காணும் பெயர்ச்சொற்கள் மிகவும் எளிமையான முறையில் உருவானவை. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அடிப்படையில் மக்களின் பெயர்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டு: வேலன் (‘வேலை உடையவன்’; பொருட்பெயர்), குடவர் (‘குட/மேற்குத் திசையில் வாழ்கிறவர்’; இடப்பெயர்), பகலோன் (‘பகல் நேரத்துக்குரியவன்’; காலப்பெயர்), முடவன் (‘முடங்கிய உறுப்பு உடையவன்’; சினைப்பெயர்), இனியன் (‘இனிய பண்பு உடையவன்’; பண்புப்பெயர்/குணப்பெயர்), தச்சன் (‘தச்சுத் தொழில் செய்பவன்’; தொழில் அடிப்படை)

துடியன் என்பவன் துடிப்பறையை இயக்கியவன்; பாணன் என்பவன் பாண் தொழிலைச் செய்தவன்; பறையன் என்பவன் பறையை முழக்கியவன்; கடம்பன் என்பவன் கடம்படுதலைச் (தெய்வத்துக்கோ மனிதர்களுக்கோ செய்யவேண்டிய கடமையைச்) செய்தவன்; கூத்தர் என்பவர் கூத்தாடும் தொழிலைச் செய்தவர்; அகவுநர் என்பவர் அகவுதல் என்னும் தொழிலைச் செய்தவர்; விறலி என்பவள் உள்ளத்து உணர்வுகள் உடலில் வெளிப்படும் வகையில் ஆடியவள்; உழவர் என்பவர் உழவுத்தொழிலைச் செய்தவர்; உமணர் என்பவர் உப்பு விற்றவர்; இப்படி நூற்றுக்கணக்கான பெயர்களுக்கு விளக்கம் காணலாம்.  

ஆனால் சிலருடைய மேற்கத்தியப் பார்வை இந்தப் பெயர்களால் குறிக்கப்படும் சிலரை (துடியன், கிணைஞன், பாணன், கடம்பன், ) ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் அடைச்சொற்களாகவோ விளக்கச்சொற்களாகவோ (epithet) “புலையன்” என்ற சொல்லையும் “இழிபிறப்பாளன்” என்ற சொல்லையும் சுட்டுவது சரியா என்று நினைத்துப் பார்ப்பது நல்லது. 

இந்தக் கோணத்தில் ‘புலையன்,’ ‘புலைத்தி’ என்ற சொற்களின் வழக்காற்றைப் பார்ப்போம்.

புலையனும் புலைத்தியும்  
————————————
‘புலையன்,’ ‘புலைத்தி’ என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் வழங்குகின்றன. இவை போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் — துடியன், பாணன், பறையன், கடம்பன், விறலி, பாடினி, அகவர், அறைநர், அரிநர், இடையர், ஏழையர், ஊமன், கூவுநர், பொருநர், கோடியர், — சங்க இலக்கியத்தில் உண்டு.  

சங்கப் பாடல்களில் இந்தச் சொற்களின் வழக்காற்றைப் பற்றிக் கல்வியுலகில் ஒரு சிலர் பரப்பிய கருத்துகள் தமிழகத்து மக்களின் ஒருமைக்கு வழிகோலுவனவாக இல்லை; மாறாக, ‘சாதி,’ ‘தீட்டு,’ ‘தீண்டாமை’ என்ற கருத்துப் பேய்களுக்குத் தீனியாகவே அமைகின்றன. அதுவும், இணையம் என்ற வசதி பேயாக மாறியபின் ஒருவரை ஒருவர் இழித்து எழுதவும் அந்தக் கருத்துகள் உதவுகின்றன. அதுதான் மிகப் பெரிய தவறு, கொடுமை

இந்தக் காலத்தில் தமிழ் ஆய்வுக்குள் நுழைய விரும்பும் பலரும், அவர்கள் மரபுவழித் தமிழ் படித்தவர்களோ இல்லையோ, முதலில் அணுகுவது ஓர் அகராதியை. நாங்கள் படித்த பழைய காலத்தில் வகுப்பில் ஆசியர்கள் சொன்னதும் அவர்கள் கற்பித்த இலக்கிய இலக்கணங்களுமே எங்களுக்குக் கலங்கரை விளக்கம்; அகராதியைத் தேடிப்போனதில்லை. அகராதியெல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்கு என்று இருந்த காலம் அது. 

நிற்க. 

இந்த இணைய (internet) காலத்தில், ‘புலையன்’ என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கும் இணய ஆய்வாளர் (internet researchers) பலரும் முதலில் புரட்டுவது சில அகராதிகளையே. அதில் தவறில்லை. ஆனால், அந்த அகராதிகள் எடுத்த எடுப்பிலேயே ‘புலையன் என்பவன் கீழ்மகன்’ என்று சொன்னதை வைத்துக்கொண்டு மேற்செலுத்தும் ஆய்வுகளை எவ்வளவிற்கு நம்ப முடியும்? நீங்களே நினைத்துப் பாருங்கள். அதோடு, இக்கால நிகழ்வின் வழியே பார்த்துப் பழங்கால இலக்கியங்களை அலசி ஆய்வு முடிவுகளை உருவாக்குவது நேரியதா? 

**********
Winslow என்ற மேற்கத்தியரின் அகராதி தருவது:

புலை, [ pulai, ] s. Flesh, or fish, ஊன். 2. Stink, stench, நாற்றம். 3. Vice, evil, baseness, தீமை, as புல். 4. A lie, பொய். புலையுங்கொலையுங்களவுந்தவிர். Avoid flesh (or a lie) murder, and theft. (Avv.)
புலைச்சி--புலைமகள், s. A low caste woman. 2. See புலையன்.
புலைச்சேரி--புலைப்பாடி, s. A low caste village.
புலைஞர், s. [pl.] The base, as புலையர். (சது.)
புலைத்தனம், s. Barbarity, baseness, vileness, கொடுமை.
புலைத்தொழில், s. Vicious habits or practices, கொடுஞ்செய்கை.
புலைமகன்--புலையன், s. A very low caste man.
புலைமை, s. A vicious practice, as புலை த்தனம். 2. A vile or low condition, கீழ்மை.
புலையன், s. [pl. புலையர், fem. புலைச்சி.] A tribe of aborigines, inhabiting some mountains, as the Pulneys, ஓர்சாதியான். 2. A base or low caste person, கீழ்மகன்.
புலையாட, inf. To lead a vicious life.
புலையாட்டம்--புலையாட்டு, v. noun. Transitoriness, illusiveness, a false appearance. (Colloq.)

இங்கே ஓரிடத்திலாவது பழைய இலக்கியச் சான்று இருக்கா? நீங்களே சொல்லுங்கள்.

********** 
(Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House, 1972.)
Fabricious என்ற மேற்கத்தியரின் அகராதி தருவது: 
புலை [ pulai ] , s. same as புலால்; 2. baseness, wickedness, evil, தீமை; 3. a lie, பொய்.
புலையுங்கொலையுங் களவுந்தீர், avoid flesh (or a lie), murder and theft.
புலைஞர், same as புலையர்.
புலையன், (fem. புலைச்சி, pl. புலையர்) a man of a certain low mountain tribe; 2. a base or low-caste person.
புலையாட, to lead a vicious life.
புலையாட்டம், -யாட்டு (coll.) illusiveness, a false appearance.

புலோமசித்து [ pulōmacittu ] {*}, s. Indra, the conqueror of the Rakshasa புலோமன்.
புலோமசை [ pulōmacai ] {*}, s. Indrani, (the wife of Indra) as daughter of புலோமன்.
புலோமன் [ pulōmaṉ ] , s. the father of Indrani; 2. a Rakshasa.
எச்சிலார், low-caste people, இழிஞர்
(Why did he understand/interpret the word எச்சிலார் as low-caste people, இழிஞர்?!!!).

[இதே அகரமுதலி ஆக்கிய பெருந்தகை Fabricious குறித்தது: கௌண்டர் (p. 321) [ kauṇṭar ] , (Kanarese) கவுண்டர், s. flesh-eaters, people of the lowest order, புலையர்; 2. a low caste named so, சண்டாளர்; 3. an honorific title of certain tribes. சௌனிகன் (p. 461) [ cauṉikaṉ ] {*}, s. a dealer in flesh; a meat seller; 2. one of low cast, புலைஞன்.] 

இங்கே ஓரிடத்திலாவது பழைய இலக்கியச் சான்று இருக்கா? நீங்களே சொல்லுங்கள்.

********** 
“புலை” என்ற சொல்லுக்குப் பொருள் தரும் சென்னைத் தமிழ் அகரமுதலி (Madras Tamil Lexicon) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்கப் பாடல்களிலிருந்து ஒரு மேற்கோளும் காட்டவில்லை என்பது நோக்கற்குரியது

புலை pulai
, n. prob. புல¹-. [K. hole.] 1. Baseness; இழிவு. புலையாம் பிறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க. 16). 2. Uncleanness; அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 3. Defilement; தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11). 4. Vice, evil way; தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத் தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 5. Lie; பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6). 6. Adultery; வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவ னென (மணி. 13, 91). 7. Animal food; ஊன். புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 8. Outcaste; கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6). 9. Stench; தீ நாற்றம். (W.) 

************** 
இந்தப் பொருள்களைப் பார்ப்போம்.

1. Baseness: இழிவு. புலையாம் பிறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க. 16). 
இது சங்கப் பாடல் சான்றில்லை. எனவே, இந்தப் பொருளை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பாடல்கள் காட்டும் பண்பாட்டை ஆராய்வது நேரியதில்லை

2. Uncleanness; அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 
இந்தப் பொருள் பரவாயில்லை. வேள்விச்சாலையில் பசுவைக் கொன்றதால் வடிந்த குருதியும் பிரித்தெடுத்த ஊனும் இருக்கும். ஆனால், அந்த வேள்விச்சாலை அந்தணர்களால் உண்டாக்கப் பெறுவது, புலையனால் இல்லை, அதைக் கட்டாயமாக நினைத்துப் பார்க்கவும். அல்லது புலையன் == அந்தணன் என்ற பொருளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. Defilement; தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11).  
இந்தப் பொருளுக்கு அடிப்படை என்ன என்று தெரியவில்லை
புலை செய்து” என்றால் தீட்டு’ செய்தலா? ‘தீட்டு’ என்பதை எப்படிச் ‘செய்ய’ முடியும்? ஆகவே, ‘புலை’ என்பதுக்குத் ‘தீட்டு’ என்பது சரியான பொருளில்லை.

4. Vice, evil way; தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 
இது சங்கப்பாடலில் இல்லை. பிறன் மனைவியைக் கவர்ந்த இராவணனின் செயல் குறிக்கப்பட்டதால் இங்கே ‘புலை’ என்பதுக்குப் ‘பரத்தமை’ என்ற பொருள் பொருந்தும் என்று தோன்றுகிறது.

5. Lie; பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6).  
இது சங்கப்பாடலில் இல்லை. பவுத்த நெறியில் பஞ்ச சீலம்’ என்ற கோட்பாடு உண்டு. அதன்படி, ‘கள், களவு, காமம், கொலை, பொய்’ ஆகிய செயல்கள் ஐந்து வகைக் குற்றங்கள் என்று கொள்ளப்பட்டன. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்த எடுத்துக்காட்டில் உள்ள ‘புலை’ என்ற சொல்லுக்குப் ‘பொய்’ என்ற பொருள் ஏற்புடைத்தாகத் தெரிகிறது. சங்கப் பாடல்களில் களவு நட்பில் ஈடுபட்ட தலைவனும் பொய் சொல்லுகிறான் (குறுந்தொகை 25; அகநானூறு 256); அப்படியானால் அவனும் புலையன், இல்லையா?

6. Adultery; வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவ னென (மணி. 13, 91).  
இந்தப் பொருள் சரியாகப் படுகிறது. ஆனால், இங்கே ‘புலைமகன்’ என்று இகழப்படும் ஆபுத்திரனின் தாய் சாலியின் செயலே ‘புலை’ என்ற குறிப்பில் அடக்கம். சாலி தன் அந்தணக் கணவனை விடுத்து வேறொருவன் மூலம் பெற்ற மகனே ஆபுத்திரன். எனவே, சாலியின் செயலே இங்கே குறிப்பு. மணிமேகலைக் காப்பியத்தில் விளக்கம் காணலாம்.

7. Animal food; ஊன். புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 
இது ‘இன்னா நாற்பது’ என்ற இலக்கியத்தில் உள்ள 12-ஆம் பாடலில் ஒரு வரி. முழுப்பாடலும் இங்கே:
“தலை தண்டம் ஆகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா
முலை இல்லாள் பெண்மை விழைவு”
புலையுள்ளி < புலை + உள்ளி.’ “உள்ளி” என்றால் ‘நினைத்து’ என்பது பொருள். 
யாராவது “ஊனையே” நினைத்து வாழ்வார்களா? ‘ஊன் உண்ண வேண்டும்’ என்பது அவர்களுக்குக் கனவா? சரி, அப்படியே எடுத்துக்கொண்டாலும் பாரியின் பறம்பு மலையில் வெட்டப்பட்ட ஆடுகளின் கறியையும் வார்த்த கள்ளையும் சுவைத்த அந்தணர் கபிலர் என்பவரும் ஒரு புலையன், இல்லயா? மறவர்களும் கொழுத்த ஆவின் இறைச்சியைத் தின்றிருக்கிறார்கள் (அகநானூறு 129); மழவர்களும் கொழுத்த ஆவின் குருதியைத் தூவிச் சமைத்து உண்டிருக்கிறார்கள் (அகநானூறு 309). ஆகவே, இவர்களும் புலையர்களே, இல்லையா?

8. Outcaste; கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6). 
எடுத்த எடுப்பிலேயே “புலை” என்பதுக்கு “Outcaste; கீழ்மகன்” என்று பொருள் சொன்னதைப் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அதுக்குச் சான்றாகச் சொன்ன ஆசாரக்கோவைப் பாடலையும் நாம் பார்க்க வேண்டும். 

இந்த எச்சில் என்ற சொல் அகரமுதலிகள் கையில் படாத பாடு பட்டிருக்கிறது! 
மனிதரின் வாயில் ஊறும் உமிழ்நீரிலிருந்து சிவனும் உமையும் புணர்ந்து உண்டாகிய கருவின் சிதைவுகள் வரை “எச்சில்” என்பதுக்குப் பொருள் இருக்கு!!!

8a. தமிழ் ஆர்வலர்கள் பரிபாடல் (#6) ஒன்றைக் கட்டாயமாகப் படித்துப் பார்க்கவேண்டும். முருகனுக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே இழையும் வரலாறு சொல்லும் அருமையான பாடல் இது. இங்கே கார்த்திகேயன் என்பவன் உமை-சிவன் இருவரும் காலமல்லாத காலத்தில் கலந்த புணர்ச்சியில் உருவான “எச்சில்” (5:42). இந்தக் குறிப்பில் தவறில்லை. ஆனால் இந்த “எச்சில்” என்ற சொல் பாவப்பட்ட “புலையன்” என்ற பிறவியை மட்டும் குறிப்பதாக எடுத்துகொண்டால் அந்தக் கார்த்திகேயனும் புலையனே, இல்லையா???

8b. ஆசாரக்கோவையில் பல பாடல்களில் (5-7) “எச்சில்” என்பது பற்றிய குறிப்பு இருக்கிறது. 

8bi. எச்சிலோடு தீண்டக்கூடாதவர்கள்: பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை

8bii. எச்சிலோடு பார்க்கக்கூடாதவை: புலை, திங்கள், ஞாயிறு, நாய், வீழ்மீன் 

8biii. எச்சிலில் பல வகை உண்டாம். அதிலே, நான்கு வகை எச்சிலை மட்டும் சொல்கிறது ஆசாரக்கோவை. அவை: இயக்கம் இரண்டு (மலம் மூத்திரம் கழித்தல்), இணை விழைச்சு (sexual intercourse), வாயில் விழைச்சு (oral sex). 

இதையெல்லாம் சொல்லிய ஆசாரக்கோவை (#8) ஓர் அறிவுரையும் தருகிறது: மேதைகளாக உருவாகிறவர்கள் இந்த நால்வகை எச்சிலையும் கடைப்பிடித்து, ஒன்றினையும் ஓத மாட்டார்களாம், ஒன்றினையும் பற்றிச் சொல்லமாட்டார்களாம். அதாவது இந்த மாதிரி “நால்வகை எச்சிலும் உண்டான இடத்து ஒன்றும் படித்தல் ஆகாது, வாயால் ஒன்றையும் சொல்லல் ஆகாது, தூங்கல் ஆகாது.” 

சரிதான்! ‘எச்சிலார்’ என்பவர் ஏற்கனவே எச்சில் பட்டவர்கள். ஆனால், அவர்கள் தம் எச்சிலோடு ‘புலை’யைப் பார்க்கக் கூடாது என்ற விதியின் அருமை பெருமை என்ன என்று எனக்குப் புரியவில்லையே!

9.  Stench; தீ நாற்றம்
இந்தப் பொருளுக்கு அடிப்படை என்ன என்று விளங்கவில்லை. ‘புலை’ என்பது ‘தீநாற்றம் (stench)’ என்றால் அதை ஒரு குறிப்பிட்ட மக்களோடு மட்டும் பொருத்திச் சொல்வது பொருத்தமா??? பிற மக்கள் தீநாற்றமே வெளிப்படுத்தாதவர்களா? உலக உயிர்கள் அனைத்துமே (மக்கள், விலங்கு, பயிர்) தீநாற்றம் வெளிப்படுத்தும் என்பதை அறியாதவருடன் உரையாடிப் பயனில்லை. அந்த வகையில் எல்லாருமே/எல்லாமுமே ‘புலையர்’களே. இந்தக் காரணத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களைப் பற்றி மட்டும் ‘புலையர்’ என்று சொல்வது அறிவுப் பிறழ்ச்சி, இல்லையா?

+++++++++++++++++++

சங்க இலக்கிய வழக்காற்றைப் பார்க்கும்போது இலக்கிய வழியில் தோன்றும் சில விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

(தொடரும்) 

Saturday, December 28, 2013

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 1

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 1
------------------------------------------------------

முன்னுரை
————
இன்று நாம் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தும் “சாதி,” “தீண்டாமை” என்ற சொல் வழக்காறுகளும், “உயர்ந்த சாதி,” “தாழ்ந்த சாதி” என்ற கோட்பாடுகளும் தமிழ் இலக்கியத்தில் எப்போது நுழைந்தன என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் தொடக்கமாக, பண்டைத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கப் பாடல்களில், இந்த வழக்காறுகளும் கோட்பாடுகளும் காணப்படுகின்றனவா என்று பார்க்கத் தொடங்கினேன். அந்த முயற்சியில் எனக்குப் புரிந்த கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவே. தனிப்பட்ட முறையில் யாரையும் சாடும் எண்ணம் இல்லை.

******
முதல் இலக்கணமாக நமக்குக் கிடைத்திருக்கும் தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். 

0. உயிர் —> 1. அறிவு —> 2. சாதி —> 3. பிறப்பு —> 4. பெயர்

0. உயிர்
-------------
உலகத்து இயற்கையில் தோன்றிய உயிர்களே முதலில் இலக்கண ஆசிரியன் கண்களில் படுகின்றன. தொகையாக உள்ள அவற்றை அவன் படிப்படியாக வகுத்தும் விரித்தும் பார்க்கிறான். 

இந்தத் தொகை, வகை, விரி என்ற கோட்பாடுகளே பண்டைத் தமிழ் இலக்கணத்தின் அடிப்படை. உலகைப் பற்றிய தமிழனின் பார்வையும் இப்படியே அமைந்ததாகத் தோன்றுகிறது. தொகை, வகை, விரி இவற்றை ஒட்டு மொத்தமாக, ஆங்கிலவழியில், categorization என்று கொள்ளும் கருத்தும் உண்டு. 

நிற்க. 

முதலில், உலகத்து இயற்கையில் தோன்றிய உயிர்களின் அறிவுநிலை (senses) இலக்கண ஆசிரியனுக்குத் தென்படுகிறது.

1. அறிவு
——————
உலகத்து உயிர்களின் அறிவுநிலைகளை ஒன்றறிவது, இரண்டறிவது, மூன்றறிவது, நான்கறிவது, ஐந்தறிவது, ஆறறிவது என்று நம் முன்னோர் நெறிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நெறி தொல்காப்பியருக்கு முன்பே இருந்தது என்பது தொல்காப்பியத்தின் மூலம் தெரிகிறது. 

தொகையாக உள்ள உலகத்து உயிர்களை அறிவுநிலையில் வகைப்படுத்தித் தம் முன்னோர் சொன்னதைத் தொல்காப்பியரும் உரையாசிரியரும் சொல்கிறார்கள். 

புல், மரம் போன்றவை — ஓரறிவுயிர்
கிளைப் பிறப்பு — கொட்டி, தாமரை, கழுநீர் போன்றவை
நந்து, முரள் போன்றவை — ஈரறிவுயிர்
கிளைப் பிறப்பு — சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல் போன்றவை
சிதல், எறும்பு — மூவறிவுயிர்
கிளைப் பிறப்பு — அட்டை போன்றவை
நண்டு, தும்பி போன்றவை — நான்கறிவுயிர்
கிளைப் பிறப்பு — ஞிமிறு, சுரும்பு போன்றவை
மா, புள் — ஐயறிவுயிர்
கிளைப் பிறப்பு — பாம்பு, மீன், ஆமை போன்றவை
மக்கள் — ஆறறிவுயிர்
கிளைப் பிறப்பு — தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர், ஒரு சார் விலங்கு (கிளி, குரங்கு, யானை போன்றவை)

அறிவுநிலைப்படி வகைப்படுத்தப்பட்ட உயிர்களை மேலும் நுண்ணித்துப் பார்க்கிறான் இலக்கண ஆசிரியன். உயிர்களின் இயங்குதன்மையும் வாழும் இடமும் அவற்றைப் பிரிப்பதைக் காண்கிறான். அந்த அடிப்படையில் ஒவ்வொரு பிரிவையும் குறிக்கச் “சாதி” என்ற குறியீட்டை உருவாக்குகிறான். இந்த வகைக் குறியீடு —“சாதி”— ஆங்கில மொழியில் species என்று உணரப்படும். 

2. சாதி
————
*மக்கள் சாதி, *மா/விலங்குச் சாதி, “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி” என்ற குறியீடுகள் உருவாகின்றன. 

இந்தக் குறியீடுகளில், “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி,” “பறப்பவை, தவழ்பவை (‘ஊர்வன’)” என்ற குறியீடுகள் தொல்காப்பிய, சங்க இலக்கியத்தில் உண்டு. இதைப் பிற்காலத்திய திருத்தணிகைப் புராணத்திலும் காண்கிறோம்: மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்று.

தொடக்கத்தில், *மக்கள் சாதி *மாச்சாதி/விலங்குச் சாதி என்ற அறிவு இல்லாமல் “பறவைச்சாதி,” “நீர்வாழ்சாதி” என்ற குறியீடுகள் உருவாகியிருக்க முடியாது. 

மக்கள், மா, பறவை, நீர்வாழ்வன இப்படிப்பட்ட ஒவ்வொரு “சாதி"க்குள்ளும் பல வகை உயிர்களைக் காண்கிறான் இலக்கண ஆசிரியன். ஒரு குறிப்பிட்ட “சாதி” என்ற தொகைக்குள் காணும் பல உயிர்களை எப்படிப் பகுத்து அறிவது? அப்போதுதான் “பிறப்பு” என்ற குறியீடு உருவாகிறது.

3. பிறப்பு
—————— 
இலக்கிய இலக்கணங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் சொற்கள்: “நீர்வாழ்சாதி,” “பறவைச்சாதி"

“நீர்வாழ்சாதி”யை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பிய உரையாசிரியர் சொல்லுவது: “நீர்வாழ்சாதியும் அறுபிறப்பு என்பன சுறாவும், முதலையும், இடங்கரும், கராமும், வராலும், வாளையும் என இவை.” எனவே, “நீர்வாழ்சாதி”யுள் தோன்றும் உயிர்கள் சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்றும் இவை ஒவ்வொன்றும் ஒருவகைப் “பிறப்பு” என்றும் அறியப்பட்டதாகத் தெரிகிறது. 

“பறவைச்சாதி" என்பதைச் சங்க இலக்கியப் பெரும்பாணாற்றுப்படையில் (229-230) பார்க்கிறோம்: “கடுப்புடைப் பறவைச் சாதியன்ன பைதற விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு-உடைத் திரள் தாள் … .” முற்றி விளைந்த செந்நெல்லின் குழல் போன்ற தாள் (அடிப்பகுதி, காம்பு) அந்த நெல்லை அரிகிறவரின் கையைக் குத்தும். அதுக்கு உவமை கொட்டுகிற தேனீ; அது “பறவைச்சாதி.”

மக்கட்சாதியை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பிய உரையாசிரியர் சொல்லுவது: “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.” நுண்ணித்துப் பார்க்கவும். இங்கே ‘குலம்’ என்பது ‘சாதி’ இல்லை! ‘குலம்' என்பது ‘சாதி’க்குள் அமையும் ஒருவகை அமைப்பு. இந்த எல்லாக் குலமும் மக்கட்சாதிக்குள் அடக்கம்! 

4. பெயர்
—————— 
இந்த மக்கட்சாதிக்குள்ளும் இடம், செயல் போன்றவற்றால் பிறப்புகள் பலவகைப்படுகின்றன. அப்படி வேறுவகைப்படும் அவற்றைத் தனித்தனியே குறிக்கவேண்டுமானால் என்ன செய்யலாம்? அப்போதுதான் “பெயர்" என்ற குறியீடு உருவாகிறது. 

மக்களை “உயர்திணை” என்றும் மக்கள் அல்லாதவற்றை “அஃறிணை” என்றும் பிரித்த இலக்கண ஆசிரியன் உலகில் காணும் பலவகைப்பட்ட உயர்திணைப் பெயர்களை வகுத்துச் சொல்கிறான்:

“நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே”

அதாவது, மக்களின் பெயர்கள் மேற்சொன்ன பல வகையில் புழங்கும்.

உரையாசிரியர் தரும் எடுத்துக்காட்டு:

நிலப்பெயர்: அருவாளன், சோழியன் என்பன.
குடிப்பெயர்: மலையமான், சேரமான் என்பன.
குழுவின் பெயர்: அவையத்தார், அத்திகோசத்தார் என்பன.
வினைப்பெயர்: தச்சன், கொல்லன் என்பன.
உடைப்பெயர்: அம்பர் கிழான், பேரூர் கிழான் என்பன. வெற்பன், சேர்ப்பன் என்பனவும் அவை.
பண்புகொள் பெயர்: கரியான், செய்யான் என்பன.
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர்: தந்தையர், தாயர் என்பன.
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர்: பெருங்காலர், பெருந்தோளர் என்பன.
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர்: பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன.
கூடிவருவழக்கின் ஆடியற்பெயர்: பட்டிபுத்திரர், சங்கிராமத்தார் என்பன.
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்: ஒருவர், இருவர், மூவர், முப்பத்து மூவர் என்பன.
‘இன்றிவர்’ என்பது ‘இத்துணையர்’ என்னும் பொருட்டுப்போலும்.

ஆகவே, மக்களாகப் பிறந்த எந்த உயிரையாவது சுட்டிக் கூறவேண்டுமானால் மேற்கொண்ட பெயர் வகைகள் உதவியிருக்கின்றன என்று தெரிகிறது. 

இந்த நூற்பாவிலும் படிநிலை அணுகுமுறையைப் பாருங்கள். படிப்படியாக, பெரிய அமைப்பில் தொடங்கிச் சிறிய அமைப்புக்கு வருவதை: நிலம் என்பதே அடிப்படை, அதில் அமைவது குடி, குடியில் அமைவது குழு, குழுவில் அமைவது வினை இப்படி! 

இங்கே நமக்கு ஓர் ஐயம் தோன்றலாம். மக்களை வகைப்படுத்தும்போது ‘இந்த/அந்த வகை மக்கள்’ என்று குறிக்காமல் ஏன் ‘பெயர்' என்ற குறியீட்டை மேற்கொண்டார்

இன்னொரு தொல்காப்பிய நூற்பா இதற்கு விடை தருகிறது. 

“பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே”

இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் உரை:
“திணைநிலைப்பெயர் என்றதனான் அப்பெயருடையார் பிற நிலத்து இலர் என்று கொள்ளப்படும். பெயர் என்றதனால் பெற்றதென்னை? மக்கள் என அமையாதோ எனின், மக்களாவார் புள்ளும் மாவும்போல வேறுபகுக்கப்படார், ஒரு நீர்மையராதலின். அவரை வேறுபடுக்குங்கால் திணைநிலைப்பெயரான் அல்லது வேறுபடுத்தல் அருமையின் பெயர் என்றார்.”

அதாவது, மக்களிடமிருந்து பறவைகளையும் விலங்குகளையும் வேறுபடுத்துவதுபோல் மக்களுக்குள் வேறுபடுத்த முடியாது. மக்களுக்குள் வேறுபாடு காட்டவேண்டுமானால், ‘திணைநிலை மக்கள்’ ‘வினைநிலை மக்கள்’ போன்ற குறியீடுகளால் வேறுபடுத்த முடியாது. ஏனென்றால் எல்லா மக்களும் ஒரே நீர்மை/தன்மை உடையவர்

எவ்வளவு கூரிய, துல்லிய, நேரிய உரை! ‘மக்கட்சாதி’க்குள்  உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வேறுபாடு காட்ட இயலாது என்பதைத் தலையில் அடித்து உணர்த்தியது போல அல்லவா இருக்கிறது, இந்த உரை! 

மேலே சொல்லிய பெயர்வகைகளோடு இயற்பெயர், சுட்டுப்பெயர், சிறப்பினால் ஆகிய பெயர் இன்ன பிற பெயர்களும் வழங்கியிருக்கின்றன. 

காட்டு: சாத்தன், கண்ணன், அவன், இவன், ஏனாதி நல்லுதடன், சோழன் நலங்கிள்ளி போல்வன

****** 
இப்படிப் போகும் தொல்காப்பிய நூற்பாக்களும் உரைகளும் தெரிவிப்பது என்ன? 

1. “சாதி” என்ற சொல் உலகத்தில் மொத்தமாகக் காணப்படும் உயிர்களை வகைப்படுத்திச் சொல்லும் சொல். ஆங்கிலத்தில் species என்ற சொல் தரும் பொருளை ஒத்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது மக்களை மட்டும் குறிக்கும் குறியீடு இல்லை. 

1a. சாதிகளுள் உயர்வு/தாழ்வு சொல்லவேண்டுமானால் ஒரு சாதியோடு இன்னொரு சாதியை ஒப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக, மக்கள் சாதியையும் பறவைச் சாதியையும் ஒப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதி எது தாழ்ந்த சாதி எது என்று சொல்லவேண்டும். ஆனால், அந்தந்தச் சாதியுள் காணும் பிறப்புகளை இது உயர்ந்த/தாழ்ந்த சாதி என்று சொல்லக்கூடாது. காட்டாக, முதலையை ‘உயர்ந்த சாதி’ என்றும் எறும்பை ‘இழிந்த சாதி’ என்றும் குறிப்பிடக்கூடாது. 

வலியுறுத்தவேண்டி மீண்டும் சொல்கிறேன். “சாதி” வேறுபாடு காட்டவேண்டுமென்றால் மக்கள் :: விலங்கு :: ஊர்வன :: பறப்பன :: நீரில் வாழ்வன :: பயிர்கள் என்ற அடிப்படையில்தான் காட்டவேண்டும். இந்த வகைகளுக்குள் ‘சாதி' வேறுபாடு காட்டக்கூடாது! அதாவது, நீர்வாழ்சாதியான சுறா, முதலை, வரால், வாளை இவற்றில் இது உயர்சாதி' ‘இது தாழ்சாதி' என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவை எல்லாமே ஒரே சாதி: ‘நீர்வாழ் சாதி.” புரிகிறதா? 

2. சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் "சாதி" என்பதும் "பிறப்பு" என்பதும் ஒரே பொருளைத் தரவில்லை. தொல்காப்பிய மரபியல் இதற்கு அடிப்படைச் சான்று. பிற இயல்களில் உள்ள நூற்பாக்களும் தொல்காப்பிய உரைகளும் இதை உறுதி செய்கின்றன. 

2a. "பிறப்பு" என்பது "சாதி"யின் உட்பிரிவு என்று தெரிகிறது. எனவே “இழிசாதி" == “இழிபிறப்பு" (low caste, low birth) என்று சொல்வதெல்லாம் பொருளற்றது, பெரிய தவறும்கூட.

3. மக்கட்சாதியில் பிறந்த உயிர்களைக் குறிக்கும் பெயர்கள் அந்த உயிர்கள் வாழும் இடம், அவை செய்யும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தன. பிறப்பின் அடிப்படையில்  அமைந்ததில்லை. 

3a. எனவே "இழிபிறப்பாளன்" என்பது போன்ற சொற்கள் அவர்கள் பிறந்த மக்கட்"சாதி"யைக் குறித்து அமையவில்லை. 

(தொடரும்)





Wednesday, December 4, 2013

New Perspective on Purananuru #299 ...

On Purananuru #299
------------------------------- 

(sorry for not being to use the Tamil font yet.)

This brief write-up is about an Old Tamil poem, puṟanāṉūṟu #299, the interpretation of which has confused many scholars of caṅkam literature. 

The poem goes as follows:

parutti vēli-c cīṟūr maṉṉaṉ
uḻu-t-tatar uṇṭa ōy-naṭai-p puravi
kaṭal maṇṭu tōṇiyiṉ paṭai mukam pōḻa
neymmiti aruntiya koycuval eruttiṉ
taṇṇaṭai vēntaṉ tāruṭai-p puravi
aṇaṅkuṭai murukaṉ kōṭṭattu-k
kalam toṭā makaḷiriṉ ikaḻntu niṉṟavvē

The gist of the poem:

Two types of horses are used in a war. One type is from a simple small land and fed with husks of black-gram, charging the army like a/many raft(s) rushing into an ocean. The other type of horses are from a wealthy area, richly fed, and well groomed. They don't cut through the army unlike the horse(s) of the first type, but ignored and stood away like women who ignore and stand away from the vessel(s) in a Murukan temple. 

The comparison of certain horses to certain women, especially the description of the women in this poem has intrigued many scholars. 

Early commentators seem to have mulled over the poem and came up with their interpretations. 

Fact: Certain horses stood away from the war just like some women standing away from the vessel(s) in a Murukan temple. 

Basic question: Why did these women stand away from the vessel(s) in a Murukan temple? 

Interpretators have come up with a strange conclusion! 

Women in this poem are said to be standing away from the vessel(s) in a Murukan temple. Why? Ah, it must be because they were NOT ALLOWED to touch the vessel(s) in a Murukan temple. Why were they NOT ALLOWED to touch the vessel(s) in a Murukan temple?  Ah, they were "impure,” "polluted,” "filled with dangerous sacred force,” and all kinds of malicious forces that "ought to be controlled,” and therefore they could not touch the vessel(s) in a Murukan temple! But why were these women "impure" and all that? Oh, because they were BLEEDING with MENSTRUAL blood! 

[Personal note: Gross it may sound, but in general I see a lot of pleasure and curiosity in men for talking about women's body parts such as large breasts and odorous excretion like menstrual blood. I guess it’s because the male body is poorly dull and uninteresting! ;-)]

Anyway ... 

There are serious problems in the interpretations and understanding of this poem. 

1. The words "ikaḻntu" and "niṉṟa" in the last line of the poem which describes the demeanor of certain horses are usually misunderstood in the interpretations. 

2.a. The word "ikaḻntu" DOES NOT mean "fearing" or "frozen" as many people have interpreted it. One can refer to the usage of this word “ikaḻntu” in the poems and in the dictionaries. 

2.b. The word "niṉṟa" DOES NOT mean "went away." 

3. The phrase "kalam toṭā makaḷir" has been treated out of context. It SHOULD be taken along with the preceding "murukaṉ kōṭṭattu-k," so the word "kalam" is modified grammatically accurately by the phrase "murukaṉ kōṭṭattu."  

3a. To claim that menstruating women (plural, that too in a standing position!) were present in a Murukan temple … sounds IDIOTIC, RIDICULOUS, and gross.  Even if someone unexpectedly starts menstruating while she is in a temple, what is the reason for her to keep on standing there? Is she waiting for a limo-ride to go home?! A sane woman would move away from the Murukan shrine right away if she feels menstrual blood … well, you can understand what I’m trying to describe here. 

3b. Women have a good sense of when they would menstruate and will not go to a temple and will not participate in any festivities if they are currently menstruating or would in a day or two. Thanks to our scholarly friend Hari Krishnan for understanding it and also pointing it out. I’m sure it must have been the case IF menstruation was a taboo in the time when the Cankam poems were written. 

4. Why don’t intelligent scholars turn around 180 degrees and understand the phrase “kalam toTA makaLir” from a grammatical point of view as well?

4a. The phrase “kalam toTA makaLir” has a negative adjectival participle “toTA.” We can compare phrases like “vATa malli,” “pUvA vanci,” “punaiyA Oviyam,” “ezutA-k kiLavi,” and so on. These phrases describe a perennial state of the object described, not as tentative or as occurring once in a month or so. 

5. When a woman (even someone post-menopausal) says that she cannot even "touch" certain foods like "puLiyOtarai," does it mean that she is "menstruating and impure" at that time so she cannot touch the “puLiyOtarai?” Or when an orthodox brahmin man and I say that we never touch meat, does it mean that we both are "impure" (== menstruating!!) so we are not allowed to touch the meat? We wear gloves when we clean the bathroom/toilet; does it mean that we are "menstruating and impure" and are not allowed to touch the things in the bathroom/toilet? Or, does it mean that the the stuff in the bathroom/toilet is unclean and we don't want to touch them? 

6. We read in Cankam poetry about the “talaivi” despising the “veRiyATTu” during which a little lamb is killed and its blood is smeared on her forehead! Naturally, women must have been disgusted with the blood in the Murukan temple. So ... there was blood -- NOT from a women's body but from a poor little lamb! 

6a. We read about goat-blood being offered to Murukan (as mentioned even in the Tirumurukarruppadai). So, there could have been blood in the vessel(s) that women despised and stood away from those vessels.